Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 26 final episode

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 26


கிருஷ்ணாவுடன் நேரம் செலவிடுவதற்காகவே சில அலுவலக வேலைகளை குறைத்துக் கொண்டாள்.
பல வேலைகளை தள்ளிப் போட்டாள்.


குழந்தையுடன் பூனாவை சுற்றியுள்ள மலைவாசஸ்தலங்களில் இருவரும் இனிமையாய் பொழுதைக் கழித்தனர்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு மனைவி, குழந்தையோடு, அவன் மனம் நிறைந்த வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான்.

இந்நிலையில் ஒருநாள்,


"கிருஷ்ணா, கூர்க்குல இருக்கிற தலைக்காவேரிக்கு போகணும்னு இப்ப எல்லாம் அடிக்கடி மனசுல தோணிகிட்டே இருக்கு... உங்க அப்பாவும் நானும் முதல் முதல்ல போன இடம் அதுதான் ... அந்தக் கோவில் அவங்களோட குலதெய்வம்னு கூட பல முறை சொல்லி இருக்காரு ..." என ராஜேஸ்வரி சொல்ல

" சரிம்மா பெங்களூர் போயிட்டு அங்கிருந்த கூர்க் போலாம் .."

"கூர்க்லிருந்து குன்னூருக்கு போய் நம்ம எஸ்டேட்டையும் பார்த்துட்டு வந்துடணும் கிருஷ்ணா...அங்க போய் ரொம்ப நாளாச்சு ..."

" சரிம்மா நாளைக்கே கிளம்பிடலாம் ..." என்றவனுக்கு தெரியாது, அவர்களுக்காக பேரதிசயம் அங்கு காத்துக் கொண்டிருப்பது .


விமானத்தின் மூலம் பெங்களூரு வந்தடைந்தவர்கள், அங்கிருந்து காரில் பசுமையான மலைப்பகுதியின் கொண்டை ஊசி வளைவுகளில், இயற்கையை சுவாசித்தபடி பயணித்து தலைக்காவிரியை வந்தடைந்தனர்.

பெரிய தலப்புராணம் கொண்ட அந்த தலைக்காவிரி கோவிலில் அகஸ்தீஸ்வரர் தான் மூலக் கடவுள்.


காவிரியின் துவக்க இடம் என்பது சிறிய தொட்டி போல் இருக்க, அங்குதான் சிறப்பு பூஜைகள் காவிரித்தாயாக வீற்றிருக்கும் 'கவரம்மா' தெய்வத்திற்கு செய்விக்கபடும் .

குடும்ப நலத்திற்கான பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளை முடித்துக்கொண்டு கிருஷ்ணா தன் குடும்பத்தோடு காரில் பயணிக்க எத்தனிக்கும் போது, ஒரு வயதான பெண்மணி, அவன் தாயைவிட சற்று கூடுதல் வயது கொண்டவர், திடீரென அவன் கரத்தை வாஞ்சையாக பற்றி
" ராகவா " என மென்மையாக அழைக்க,

நடப்பது ஏதும் புரியாமல் ஒரு நிமிடம் கிருஷ்ணாவோடு ராஜேஸ்வரியும் உறைந்து நிற்க,

" நீங்க ...நீ .." என தடுமாறிகொண்டிருந்த அந்தப் பெண்மணி, சுதாரித்துக்கொண்டு

" என் பேரு செண்பகம், பூர்வீகம் பொள்ளாச்சி ... பெங்களூருக்கு குடி வந்து பல வருஷம் ஆச்சு ... நீங்க பாக்குறதுக்கு என் தம்பி ராகவன் மாதிரியே இருக்கீங்க ..." என கிருஷ்ணாவை பார்த்து கூறிக் கொண்டிருக்கும் போதே, நொடியில் அனைத்தையும் புரிந்துகொண்ட ராஜேஸ்வரி,

" நான் ராகவனோட வைஃப் ராஜேஸ்வரி ... இப்ப அவர் உயிரோட இல்ல ... இவன் தான் எங்க ஒரே மகன் கிருஷ்ணா..." என்றதை கேட்டதும் அதிசயத்தை கண்டது போல் கண்களை அகல விரித்து, கண் கலங்கியவர்,

" நான் ராகவனோட அக்கா செண்பகம்..." என ஆனந்தத்தோடு கூறியபடி அவர் ராதாவை உற்றுநோக்க,

"உங்க தங்கச்சி சுந்தரியோட மக தான் இவ... பேரு ராதா, என்னோட மருமக..." என்றார் ராஜேஸ்வரி.

"சுந்தரி..."

" அவங்க இப்ப இல்ல .." என ராஜேஸ்வரி தெரிவித்த மாத்திரத்தில்
அறிந்து கொண்டவரின் முகம் பாதி அதிசயம், பாதி ஆனந்தம், பாதி துக்கம், பாதி பாசம் என கலந்த கலவையாக காட்சியளிக்க,


கிருஷ்ணாவை விட ஓரிரு வயதே குறைந்த இளைஞன் தன் இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் அங்கு வர,

" அம்மா யார் இவங்க ..." என்ற தன் மைந்தனுக்கு, சற்றுமுன் நடந்த சம்பாஷனைகள் அனைத்தையும் கூறியவர், தன் ஒரே மகன் மற்றும் பேரக்குழந்தைகளை அறிமுகப்படுத்தியதோடு, தன் சின்ன பேரனின் முதல் தலை முடி இறக்குவதற்காக அங்கு வந்ததாக செண்பகம் கூறினார்.


தொலைவிலிருந்து ராதா மற்றும் கிருஷ்ணாவை பார்ப்பதற்கு தன் தம்பி மற்றும் தங்கையை போன்ற தோற்றம் அளித்ததால், அருகில் வந்து பேசியதாக தெரிவித்தார்.

பிறகு அவர்களுக்கிடையே பரஸ்பர விசாரிப்புகள் ஆர்ப்பரிக்கும் ஆனந்தத்தோடும் அதிசயத்தோடும் நடந்தேற,

" எப்படியும் பெங்களூரு தானே போறீங்க வீட்டுக்கு வாங்க ..." என்றவருடன் கிருஷ்ணாவின் குடும்பம், பயணிக்க, வசதியில் உயர்மட்டத்தில் செண்பகத்தின் குடும்பம் இருப்பது அவரது வீட்டின் வளமையில் தெரிய, அங்கு செண்பகத்தின் கணவரும், அவரது அண்ணன் கேசவனும் இருக்க, கேசவனைப் கண்டதும், தன் தந்தையே மறுபிறவி எடுத்து வந்தது போல் கிருஷ்ணாவிற்கு தோன்ற, தன் தம்பி மகனை ஒருவித குற்ற உணர்வோடு ஆத்மார்த்தமாக தழுவிக் கொண்டார் கேசவன்.

அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவருடைய மனைவி சொர்ணம் காலமானதற்கு பிறகு, பொள்ளாச்சியில் இருந்த சொத்துகளை விற்றுவிட்டு தன் தங்கை செண்பகத்தின் குடும்பத்தோடு தங்கிவிட்டாதாக கூறியவர், சொர்ணம் சுந்தரிக்கு செய்த கொடுமையும், ராகவன் விஷயத்தில் நடந்து கொண்ட சுயநலத்தையும் கூறி மனம் விட்டு மன்னிப்பு கேட்டதோடு

" உங்க அப்பாவுக்கு சேரவேண்டிய பணத்தை இன்னும் அப்படியே வச்சிருக்கேன் கிருஷ்ணா ... நீ அதை எப்ப வாங்கிக்க போற ..." என்றார்.

" என் அப்பாவே அதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்கலை பெரியப்பா.... அதே மாதிரி எனக்கும் அதெல்லாம் வேணாம்... எங்களுக்கு பணத்துக்கு பஞ்சம் இல்லை ... இத்தனை நாள் எங்களுக்கு உறவுன்னு யாரும் இல்லனு நினைச்சுகிட்டு இருந்தோம்... இப்போ உங்களை எல்லாம் சந்திச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.... உங்களுக்கெல்லாம் எப்ப நேரம் கிடைக்குதோ அப்ப எல்லாரும் பூனாவுக்கு வாங்க ..." என்றவனின் குடும்பம், செண்பகம் குடும்பத்தோடு இரண்டு நாட்கள் தங்கி, உறவினைப் புதுப்பித்துக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு குன்னூருக்கு பயணப்பட்டது.

குன்னூர் எஸ்டேட்டின் அழகில் மனதைப் பறிகொடுத்த ராதா, அங்கு நடுநிலையாக நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த அந்த பங்களாவின் கட்டமைப்பில் மனம் லயித்துப்போயிருக்க,

" ராதா, நான் சின்ன வயசா இருக்கும் போது அம்மா அப்பா கூட வருஷத்துக்கு ரெண்டு முறையாவது இங்க வந்திடுவேன்... வளர வளர இங்க வர டைமே இல்லாம போயிடுச்சு ...இப்ப கொஞ்சம் வருஷமா எங்கயும் போக மனசே இல்லாம இருந்தது ...இந்த முறைதான் எப்பவும் விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... என் அப்பாவோட குடும்பம் திரும்பி கிடைச்சது எதையோ சாதிச்ச மாதிரியான ஒரு ஃபீல கொடுக்குது .." என்றவனின் பேச்சை இடைவெட்டி ராஜேஸ்வரி ராதாவிடம்

" உங்க அப்பாவ சந்திச்சதிலிருந்து, தலைக்காவேரிக்கு போன்னு ராகவன் சொல்ற மாதிரி அடிக்கடி கனவு வந்துகிட்டே இருந்தது...இப்பதான் அதனோட அர்த்தம் புரியுது... ராகவன் ஈஸ் ய ஜெம் ஆஃப்பா பெர்சன் ... அவர்கிட்ட எப்பவுமே நேர்மையும் உண்மையும் இருக்கும் ...அவர் எப்பவும் என் கூடவே இருக்கிற மாதிரிதான் ஒரு ஃபீல் இருந்துக்கிட்டே இருக்கும் ... நிறைய விஷயத்துல என்னை சரியா வழி நடத்தியிருக்காரு .. அவர் காத்தோட காத்தா கலந்திருந்தா கூட அவர் நினைச்சதை சாதிச்சிட்டாரு..." என்றார் கண்கள் கலங்கி பெருமிதத்தோடு.

இரவு உணவு முடித்துவிட்டு, கிருஷ்ணாவும் ராதாவும், செஸ் விளையாடிக் கொண்டிருக்க,

"எத்தனை முறை தோத்துபோன ராதா .." என சிரித்துக்கொண்டே ராஜேஸ்வரி கேட்டார்.

" இதுவரைக்கும் இவர்கிட்ட நான் தோத்து போனதே இல்ல அத்தை .. இவர்தான் எப்பவும் என்கிட்ட தோத்து போவாரு..." என பெருமிதத்தோடு கூறியவளின் வாய்மொழியை கேட்டு அதிர்ச்சியோடு கூடிய ஆனந்தத்தில் கிருஷ்ணாவை முறைத்துப் பார்த்தவர்,

" ராதா, இவன் என்டிஏ(NDA)ல படிக்கும் போதே செஸ் சாம்பியன்... நிறைய அவார்ட்ஸ் கூட வாங்கியிருக்கிறான், அதைப்பத்தி எல்லாம் உன்கிட்ட சொன்னானா ..." என்றார் உண்மையை போட்டுடைத்து.


கிருஷ்ணாவின் முகத்தில் தவழ்ந்த குறும்புத்தனத்தை, பொய்க் கோபத்துடன் ஏறிட்டவள்,

" அப்ப, ஏன் என் கூட விளையாடும் போது மட்டும் எப்பவும்,தோத்து போறீங்க..." என சிணுங்கியவளிடம்,

" நீ ஜெயிக்கும் போது உன் கண்ணுல ஒரு சந்தோஷம் தெரியுது... உன் கன்னக்குழி சிரிப்பு அவ்ளோ அழகா இருக்கு...அதை ரசிக்கத்தான் ..." என ஜொள்ளியவனின் தலையில் ஓங்கி குட்டு ஒன்றை வைத்துவிட்டு சிரித்தபடி ராஜேஸ்வரி நகர, அவர் போனதும்

" செஸ்ல மட்டும் நான் சாம்பியன் இல்லை, வேற ஒன்னுலையும் நான் தான் சாம்பியன், அதுல எப்பவும் நான் தான் ஜெயிப்பேன் ..." என்றான் ஒற்றைக் கண் சிமிட்டி.



" ச்சீசீ..." என்றவளின் முகம் அந்திவானமாய் சிவக்க,

" உனக்கு என்ன, நான் தானே ஜெயிக்கணும் ...ஜெயிச்சுட்டா போகுது வா .." என்றபடி அவன் அனாயாசமாக அவளை அள்ளி கொள்ள

" ஐயோ அத்தான்... குழந்தை .."

" அம்மா தூக்கிட்டுப் போயிட்டாங்க கண்மணி ..." என்றவன் தன்னவளோடு தன்னை மறந்தான் அந்த இரவின் தனிமையில்.

மறுநாள் காலை எஸ்டேட் மேனேஜரின் மூலம் ராஜேஸ்வரி தன் குடும்பத்துடன் வந்திருப்பதை அறிந்து சந்திக்க வந்தார் பர்வதம்.

சித்தார்த்தின் சுயரூபம் தெரிந்ததிலிருந்து, பர்வதத்தை அடியோடு தொடர்பு கொள்வதை நிறுத்தியிருந்தார் ராஜேஸ்வரி.


இந்நிலையில் பர்வதம் அவர்களை சந்திக்க வந்திருப்பது ஆச்சரியத்தை கூட்ட,

" வா பர்வதம் ..." என இயல்பாக அவர் வரவேற்க முயன்றாலும்,சித்தார்த் ராதாவின் விஷயத்தில் நடந்து கொண்ட முறையும், தற்போது பர்வதத்தின் தோற்றமும் மனதிற்கு வலியை தர,

" என்னை மன்னிச்சிடு ராஜி... நான் என் பையனை சரியா வளர்க்கலை... உன் பையன் கிருஷ்ணா, பாகிஸ்தான்ல பிணைக்கைதியா இருக்கிறத பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன், ஆனா ஆண்டவன் அதுக்கு கை மேல் பலன் கொடுத்துட்டான்....

உன் பையனால உனக்கு மட்டும் இல்லை ... நாட்டுக்கே பெருமை... ஆனா நான் பெத்த தறுதலையால என் குடும்பமே தலைகுனிஞ்சதோட , இப்ப திக்கு திசை தெரியாம நிக்குது..." என்றவரின் பேச்சு புரியாமல் அனைவரும் அவரையே உற்று நோக்க,

" சித்தார்த், எத்தனையோ பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடும் போதெல்லாம் கண்டும் காணாம இருந்திருக்கேன்...
இப்ப ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, எங்க எஸ்டேட்ல லாரி லோடு அடிக்கிறவனோட தங்கச்சி கூட பழகி அவ வாழ்க்கையை நாசம் பண்ணி இருக்கான் ...அவன் தங்கச்சிக்காக நியாயம் கேட்டு வர, இவன் அவனை எகத்தாளமாக பேசி அனுப்பி இருக்கான் ...

இதை எல்லாத்தையும் மனசுல வச்சுக்கிட்டவன், சித்தார்த் பைக்ல வரும் போது, லாரியை கொண்டு மோதி, அவன் காலையே உடைச்சிட்டான்... இப்ப சித்தார்த்தோட இடது காலை எடுத்துட்டாங்க... ஆக்ஸிடெண்ட்ல முதுகுத்தண்டு அதிகமா பாதிக்கப்பட்டதால , அவன் கல்யாண வாழ்க்கைக்கு தகுதியே இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு... அவனோட தப்பை எல்லாம் முன்னாடியே நான் கண்டிச்சு வளர்த்திருந்தா இந்த மாதிரியான ஒரு நிலைமை அவனுக்கு வந்தே இருக்காது.. அவனோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம் ..." என கண் கலங்கினார்.

" அழாத பர்வதம் கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும் ... இப்பெல்லாம் மெடிகல் பீல்டு நல்லா வளர்ந்திருக்கு... சீக்கிரம் சித்தார்த் சரியாயிடுவான்..."

" இல்ல ராஜி, என்னதான் நான் உன் கூட பிறந்தவளா இருந்தாலும், உனக்கும் உன் குடும்பத்துக்கும் நான் நல்லதே நினைத்ததில்ல... இதெல்லாம் கடவுள் கொடுத்த தண்டனையா நான் ஏத்துக்க தயாரா இருக்கேன் ... ஆனா இன்னும் அந்த தறுதல இன்னும் திருந்தாம தான் இருக்கான்.... இப்ப கூட அவனுக்கு தெரியாம தான் உங்களை பார்க்க வந்திருக்கேன்... அவனுக்கு கிருஷ்ணா மேல இன்னும் வன்மம் அதிகமா தான் இருக்கு ... தன்னோட செய்கையால தான் தனக்கு கால் போச்சுன்னு இன்னும் அவனுக்கு உறைக்கவே இல்லை... அவன் எப்ப தன் தப்பை உணர்ந்து திருந்தறானோ , அப்பதான் கடவுள் அவனை குணப்படுத்துவாரு..." என தன் மனதில் நீண்ட நாட்களாக சேமித்து வைத்திருந்த குப்பைகளை கொட்டித் தீர்த்தவரிடம்,

" எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் உண்டு ... அன்னைக்கு நிச்சயமா அவனுக்கு அவனோட தவறு புரிய வரும்.... அப்புறம் எல்லாம் தானாவே சரியாகிவிடும்..." என தங்கைக்கு ஆறுதல் கூறியவர், ஓரிரு நாட்கள் அங்கு நிம்மதியாக கழித்துவிட்டு தன் குடும்பத்தோடு பூனா வந்து சேர்ந்தார்.

பூனா வந்ததும், கிருஷ்ணாவோடு அளவளாவ வீட்டிற்கு வந்த ராம், அவர்கள் பயணத்தின் போது நடந்த நிகழ்வுகளை கேட்டுத் தெரிந்து கொண்டதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருந்த தன் நண்பன் குடும்பத்தோடு சேர்ந்து சீட்டுக்கட்டு விளையாடி மகிழ்ந்தான்.



விளையாட்டில் தொடர்ந்து நான்கு முறை ராதாவே வெற்றிபெற, அதனை கண்டு துணுக்குற்ற ராஜேஸ்வரி, தான் ராதாவுக்கு முன்பாக அமர்ந்துகொண்டு கிருஷ்ணாவை இடம் மாற்றினார்.


அடுத்த முறை விளையாடும் பொழுது, ராம் ஜெயிக்க , கிருஷ்ணாவின் ஏமாற்று வேலையை அறிந்துகொண்டவர் ராமை பார்த்து சிரிக்க, அவர்களுடன் இணைந்து கிருஷ்ணாவும் நகைத்தான்.

மூவரும் இணைந்து சிரிப்பதை அறிந்து புரியாமல்,

" ஏன் எல்லாரும் சிரிக்கிறீங்க ... " என வெள்ளந்தியாக ராதா கேள்வி எழுப்ப

" கிருஷ்ணா உன் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு, ஒவ்வொரு முறையும் உனக்கு தேவையான சீட்டை மட்டும் தேடித்தேடி போட்டுகிட்டு இருந்தான்... அதனால தான் தொடர்ந்து நீ நாலு முறை ஜெயிச்சுகிட்டே இருந்த...இதைக் கண்டுபிடிச்ச நான் கிருஷ்ணாவை இடம் மாத்திட்டேன் ... இப்ப ராம் ஜெயிச்சுட்டான் .... இவ்ளோ நேரம் அவன் வகுத்த வியூகம் எல்லாம் தோற்றதை நினைச்சு நானும் ராமும் சிரிக்க, அத புரிஞ்சுகிட்ட அவனும் சிரிக்கிறான்..." என்றார் ராஜேஸ்வரி.

" ஏண்டா என்னை ஏமாத்தின ...ராதாவை உனக்கு ஒரு வருஷமா தான் தெரியும் ...என்னை உனக்கு பொறந்ததிலிருந்து தெரியுமில்ல ..." என பொய்க்கோபத்துடன் ராம் கேட்க,

" இல்லையே ராதாவை தான் அதிக காலமா தெரியும் ....” என்ற கிருஷ்ணாவின் கண்ணில் குறும்பு மின்ன,

ராதா உட்பட அனைவரும் புரியாமல் அவனையே பார்க்க,

" உன்னை இந்த ஜென்மத்துல தான்டா தெரியும்... ராதாவை போன ஜென்மத்துல இருந்தே தெரியும்... " என புன்னகைத்துக் கொண்டே கூறியவனை பார்த்து
"அடேங்கப்பா, அடிச்சான்டா அந்தர்பல்டி...
இன்னும் கொஞ்ச நேரம் இந்த வீட்டுல இருந்தேன்... எனக்கும் முன்ஜென்ம நியாபகம் எல்லாம் வந்து நானும் பைத்தியம் ஆயிடுவேன்.. உடு ஜூட் கிளம்பறேன் அத்தை " என ராஜேஸ்வரியை பார்த்துக் கூறிவிட்டு, அனைவரையும் பார்த்து சிரித்தபடி விடைபெற்றான் ராம்.

இரவு உணவு அருந்தி விட்டு படுக்கை அறையில்,

" அத்தான், நீங்க பேசியதை ராமண்ணா தப்பா எடுத்துப்பாரா.." என்றவளின் தோள்மீது கை போட்டு அணைத்துக் கொண்டவன்

" இல்ல கண்ணம்மா, நான் இப்படி பேசலன்னா தான் அவன் ரொம்ப வருத்தப்பட்டிருப்பான்.... எனக்கு அவனை நல்லா தெரியும் .... எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள எனக்கு போன் பண்ணிடுவான் .... நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்ங்கிறத விட எங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு ப்ரதர்லி ரெலேஷன்ஷிப் உண்டு... " என்றவன் கூறி முடித்த சற்று நேரத்திற்கெல்லாம் ராமிடம் இருந்த அழைப்பு வர , அதனை ராதாவிற்கு காட்டியபடி, பேச ஆரம்பித்தான்.

" ரொம்ப சந்தோஷமா இருக்குடா கிருஷ்ணா, நீ ராதாவோட இவ்ளோ அந்நியோன்யமா இருக்குறதை பார்த்து என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ..." என்றவன்

" ஒரு குட் நியூஸ் " என தயங்கிக்கொண்டே சொல்ல

" சொல்லுடா ராம் " என உற்சாகத்தோடு அவன் ஊக்க,

" நான் மறுபடியும் அப்பாவாக போறேன் டா... இன்னிக்கு தான் திவ்யாவோட மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்து டாக்டர் சொன்னாங்க ...”

" வாவ் ...கங்கிராஜுலேசன்ஸ் ராம் ...." என மனமார வாழ்த்தியவனிடம்

"நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு சாயங்காலம், குட்டிப் பாப்பாவோட என் வீட்டுக்கு வரீங்க ... ரித்விக் அதோட விளையாடனும் காத்துகிட்டு இருக்கான்..." என்றவனிடம் வருவதாக உறுதி அளித்து அழைப்பை துண்டித்தான்.


ஏதோ சிந்தனையோடு திரும்பியவனை ஆற்றாமையோடு அவள் பார்த்துக் கொண்டிருக்க

" என்ன ராதா...." என்றவனை கலங்கிய விழிகளோடு பார்த்தவள்,

" என்னால இன்னொரு குழந்தை பெத்துக்கவே முடியாது இல்ல அத்தான்..."

" ஏய் இதுக்கு ஏன் இவ்ளோ ஃபீல் பண்ற.... நமக்கு அதிதி இருக்கா... அதுவே போதும் ... நான் எப்பவுமே இன்னொரு குழந்தையை பத்தி யோசிச்சதே இல்ல... நான் மட்டும் சரியான நேரத்துல கேரளாவுக்கு வரலைன்னா உன் நிலைமை என்ன ஆயிருக்கும்னு நினைச்சுதான் இப்ப வரைக்கும் வருத்தப்படறேனே தவிர, இன்னொரு குழந்தையைப் பத்தின சிந்தனையே எனக்கு கிடையாது ...எனக்கு உன் ஹெல்த் ரொம்ப முக்கியம் கண்ணம்மா..." என்றவன் ஆறுதல் கூறினாலும் அவள் முகத்தில் தெளிவு வராமல் இருப்பதை உணர்ந்து,

" குழந்தை பெத்துக்கிறது தான் வாழ்க்கைன்னு யார் சொன்னது... உனக்குன்னு நிறைய பேஷன்(Passion) இருக்கு... அதை பர்ஸ்யூ (pursue) பண்ணி, அதுல அச்சீவ் பண்ணு டார்லிங் ... எனக்கு நீ ஆரோக்கியமா நிம்மதியா இருந்தாலே போதும் ..சரியா .." என்றான் அவள் கண்ணோடு கண் நோக்கி.

இந்நிலையில், நம் இந்திய அரசாங்கத்திடமிருந்து விருது பெறுவதற்காக, கிருஷ்ணாவின் குடும்பத்தினர் , அவனுடைய உயிர் நண்பனான ராம் குடும்பத்தினரோடு டெல்லிக்கு பயணமாயினர் .


தில்லியில் ராஷ்ட்ரபதிபவனில்
நமது ஜனாதிபதியின் பொற்கரங்களால்
கிருஷ்ணாவிற்கு வீர தீர செயலுக்கான
"வீர் சக்ரா " விருது வழங்கி கௌரவிக்கப்பட, அதனை அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பின.


அவன் விருது பெறும் காட்சியை நேரில் கண்டு, ராஜேஸ்வரியும் ராதாவும் பூரித்துப் போயினர்.


ஒரு மாவீரனை பெற்றதற்காக ராஜேஸ்வரியும், அவனை மணந்ததற்காக ராதாவும் பெருமிதம் அடைந்தனர்.

கிருஷ்ணா பணிக்கு திரும்ப இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராதா அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொள்ள,
அவன், தாய், மனைவி ,குழந்தை என அனைவருடனும் நேரத்தை இனிமையாக கழித்தான்.

அவன் தன் தாய், மனைவி , மகள் போல், தன் தேசத்தையும் நேசிக்கும் சுபாவம் உடையவன் என்பதை நன்கு அறிந்ததால், அவனிடம் தன் உணர்வுகளை வெளிகாட்டிக்கொள்ளாமல், மறுநாள் காலை பணிக்குத் திரும்பும் அவனுக்கு தேவையான, பெட்டி படுக்கைகளை ராதா தயார் செய்துகொண்டிருக்க, கடந்த முறை பயணம் போலில்லாமல், அவன் மனம் தெளிந்த சிந்தனையுடன்,நேர்மறையான எண்ணங்களோடு இருந்த நிலையில் அவன் மனையாளுடைய முகவாட்டம் மட்டும் அவனை பெரிதும் பாதிக்கவே செய்தது.

அன்றிரவின் தனிமையில் துயரத்தை சுமந்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தவளை தேற்றும் விதமாக அவள் தலையை கோதியவன் ,

" கவலைப்படாத கண்ணம்மா ஆறு மாசம் ஆறு நாளா போயிடும் ..." எனக்கூற அதைக்கேட்டு அவள் மனம் மௌன கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், நிலைமையை வேறுமாதிரியாக கையாள எண்ணி

" சரி ஒன்னு பண்ணுவோமா என் அத்த பொண்ணே ...நாளைக்கு நீயும் என் கூடவே வந்துடறயா..." என வெகு இயல்பாக அவன் கேட்க,

இம்மாதிரியான பேச்சை சற்றும் எதிர்பார்க்காதவள்,

" நானா" என வாய் பிளந்து

" நான் அங்க வந்து என்ன செய்ய முடியும் " என புரியாமல் எதிர்கேள்வி கேட்டாள்.

" என்னோட ஃபைட்டர் பிளைட்ல டிராவல் பண்ணு... " என அரும்பாடுபட்டு முகத்தை இயல்பாக வைத்தபடி கூறியவனிடம்

" அய்யோ நான் மாட்டேன் பா...எனக்கு தலை சுத்தும், வாந்தி வரும் ..."

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல கண்மணி... மாத்திரை போட்டு கண்ட்ரோல் பண்ணிக்கலாம்...என்ன ஒண்ணு நடுவானத்துல குட்டி கரணம் அடிக்கும் போது, குடல் மட்டும் கழுத்துகிட்ட வந்துட்டு போகும் அவ்ளோ தான்..." என்றவனை மெய்மறந்து அவள் கண்களை அகல விரித்து பார்த்துக் கொண்டிருக்க,

" இன்னும் ஒன்னு , உனக்கு ப்ராபர லேண்டிங் கிடைக்குமா இல்ல பாராசூட்ட புடிச்சுகிட்டு லேண்டாவையான்னு உனக்கே தெரியாது ...அவ்ளோ தான்..."
என வெகு இயல்பாக கூறி அவள் சிந்தனையை வேறு பாதையில் பயணிக்க வைத்தான்.

பொதுவாக ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள், பிரச்சனையில் சிக்கிக்கொண்டு அதிலேயே உழன்று கொண்டிருப்பவர்களை,
அவர்களது உலகத்திலிருந்து வெளிக்கொணர்வதற்கு, அவர்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத புதுவகையான பிரச்சனைகளை அறிமுகப்படுத்தி ,தீர்வு காண செய்வது என்பது மனோதத்துவ ரீதியாக (Mind diversion) எனப்படும் வேறுவகையான சிந்தனையை தூண்டுவதாகும், அதனை செவ்வனே செய்து கொண்டிருந்தான் அவளது கண்ணன்.

" இவ்ளோ பிரச்சனை இருக்குன்னா நான் பிளைட்லேயே ஏற மாட்டேன்…. எல்லையிலயே நின்னுகிறேன்..."

" அப்படி நீ எல்லையிலேயே நிக்கணும்னா, பி.எஸ்.எஃப்(BSF) பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்காங்க ...ஆனா அதுவும் சாதாரண விஷயம் இல்லை .." எனத் தொடங்கியவன் அதிலிருக்கும் இடர்பாடுகளை விளக்கிய போது

" அப்போ நான் என்னதான் செய்யறது ..." என்றாள் அவள் அங்கு சென்று எதையோ செய்தே ஆக வேண்டுமென்ற உறுதியில்.

" உன்னால உன்னையே காப்பாத்திக்க முடியல , நீ எப்படி நாட்டை காப்பாத்துவ..." என்றவனின் கேள்வி அவளுக்கு சரியாக பட,

" ஆமா இல்ல .." என்றவளின் வெள்ளந்தி யோசனையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி,

" இன்னும் ஒன்னும் இருக்கு ...நீ எல்லைல நின்னா சண்டைக்கு வர பாகிஸ்தான்காரன் கூட தெறிச்சு ஓடிடுவான் ..."

" ஏன் ...."

" ரூல்ஸ் ஆஃப் வார்ன்னு(rules of war) ஒன்னு இருக்கு இல்ல ..." என்றான் அப்பாவி போல்.

" அப்படின்னா ..."

" குழந்தைங்க கூட சண்டை போடக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்குது ..... அதனால வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வான்னு சொல்லிட்டு ஓடிடுவான்...." என சிரிப்பை அடக்கிக்கொண்டு தொடர்ந்தவன்

" அதனால நீ இங்க இருந்து வீட்டை பாத்துக்கோ ... நான் அங்க போய் ஆறு மாசத்துக்கு நாட்டை காப்பாத்திட்டு, உடனே வீட்டுக்கு ஓடி வந்துடறேன் .." என்றவனின் மதிநுட்பமான பதிலை அவள் உணரும் போதுதான், சற்று முன்பு வரை அவளுடன் அவன் விளையாடிக் கொண்டிருப்பது புரிய, அருகில் இருந்த தலையணையை , ஒன்றன் பின் ஒன்றாக அவனை நோக்கி வீச ஆரம்பிக்க, சிரித்தபடி ஒவ்வொரு தலையணையும் சரியாக கேட்ச் பிடித்தான்.

அனைத்து தலையணைகளும் வீசி முடிந்த நிலையில் , களைத்து
சோர்ந்தவளிடம்

" வாழ்க்கையை அந்தந்த நொடியில வாழ பழகிக்கணும் கண்ணம்மா .... அதுவும் என்னை மாதிரி ஆர்மிடு போர்ஸ்ல இருக்கிறவங்களுக்கு நாளைக்கு என்ன நடக்குங்கிற சிந்தனையே கிடையாது... நான் எல்லைல இருக்கிற ஒவ்வொரு நாளும், உன்னோட ஸ்பென்ட் பண்ண பியூட்டிஃபுல் டைம்ஸ் தான் நினைச்சு பார்த்துப்பேன் ... அந்த மாதிரியான மோமன்ஸ் , அந்த டே ஃபுல்லும் ஹாப்பியாவும் எனர்ஜிடிக்காவும் என்னை வச்சிருக்க உதவும் .... உன்னோட இருந்த ஹாப்பியான மோமன்ஸ் மட்டும் தான் என் கூட எடுத்துக்கிட்டு போகனும்னு ஆசைப்படறேன் ....சோ, சிரிச்ச முகத்தோட எனக்கு செண்டு ஆஃப் கொடு பேபி...." எனக் கேட்டுக் கொண்டவனின் முகத்தை, ஆழமான காதலுடன் பார்த்தவள் அதுவரை அவள் மனதில் அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்றிணை இறக்கி வைத்துவிட்ட உணர்வினைக் பெற்றாள்.

அவளது முகத்திலிருந்தே அவள் மனதைப் படித்தவன்,

" இனிமே எதைப் பத்தியும் யோசிக்காம , நிம்மதியா தூங்கலாம் வா ..." என்று அவளைத் தன் மார்பின் மீது சாய்த்துக்கொண்டு, தலை கோதியவன் ,சற்று நேரத்திற்கெல்லாம் அவள் உறங்கி விட்டதை உறுதி செய்துகொண்டு, அவனும் கண்ணயர்ந்தான்.

மறுநாள் காலையில், ராம் வழக்கம் போல் கிருஷ்ணாவின் பயணத்திற்காக காரில் காத்திருக்க, தன் தாயின் பாதம் பணிந்து ஆசீ பெற்றவனை அணைத்துக்கொண்டு பிரியாவிடை ராஜேஸ்வரி கொடுக்க, தொண்டை அடைக்கும் துயரம் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், குழந்தையை கையில் ஏந்தியபடி நின்றிருந்தவளை நெருங்கியவன், அவள் நெற்றியில் ஆழ்ந்த உச்சி முகர்ந்துவிட்டு
சுருட்டை தலையுடன்,குண்டு கன்னமும் முட்டைக் கண்களுமாய் , ஏதோ 'ஆ,இ' எனக் கூறிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டு அனைவருக்கும் போய் வருவதாக கையசைத்துவிட்டு, தன் கடமையை நிறைவேற்ற, காரில் ஏறி நாட்டைக் காக்க புறப்பட்டான்.


********************************************

ஐந்து வருடங்களுக்கு பிறகு .....


அரங்கம் முழுவதும் கரவொலி எழ,

The youngest female CEO of this year goes to. Mrs. Radha Krishna இம்முறை கரவொலி சத்தம் விண்ணைப் பிளக்க, மெல்லிய லாவண்டர் நிற காஞ்சி பட்டுடுத்தி, புடவை தலைப்பை கையில் ஏந்தியபடி, நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வையோடு, அரங்கத்தை நோக்கி நடை போட்டவளை, கைத்தட்டி ஆரவார படுத்தியபடி, தன் 5 வயது குழந்தை அதிதி கிருஷ்ணாவோடு, அரங்கத்தின் முன் வரிசையில், தன் தாய் ராஜேஸ்வரி மற்றும் தன் உயிர் நண்பன் ராம் குடும்பத்துடன் உற்சாக மனநிலையில் கம்பீரத்துடன் வீற்றிருந்தான் குரூப் கேப்டன்(Group captain) கிருஷ்ணா ராகவன்.

உடன் அவன் தந்தை வழி சொந்தங்கள், செண்பகம் மற்றும் சுந்தரம் குடும்பமும் வந்திருந்து, ராதா விருது பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வயது மூப்பு காரணமாக ராஜேஸ்வரி பணியிலிருந்து ஓய்வு பெற, இரண்டு மாநிலங்களில் மட்டும் இருந்த அவர்களது நிறுவனம்
'ஆர்.ஆர் சிஸ்டம்' ஐ, கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் அதன் கிளைகளை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறாள் ராதா.


ஆதலால்தான் அவளுக்கு இந்த ஆண்டின் இளம் தலைமை நிர்வாக அதிகாரிக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுதா எம்.டி இன் கார்டியாலஜி, முடித்துவிட்டு தலைசிறந்த மருத்துவமனையில் இதய நோய் நிபுணராக பணியாற்றி வருகிறாள்.

பர்வத்திற்கும் இந்த விருது பெறும் விழாவிற்கு வர வேண்டும் என்ற ஆசைதான், ஆனால் சித்தார்த் அவரை அனுமதிக்கவில்லை…


அவன் இப்பொழுது செயற்கைக்கால் பொருத்தப்பட்டு இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவனுள் பெரிய மாற்றங்கள் ஏதும் வந்துவிடவில்லை .....எப்பொழுது தன்னுடைய நிலைமைக்கு தான் தான் காரணம் என முழுமையாக உணர்கிறானோ அன்றுதான் அவன் மனம் தெளிவடையும் .... நிச்சயம் காலம் அதனை அவனுக்கு உணர்த்தும் என்றே அனைவரும் நம்பினார் .....

ரேஷ்மி தொழிலதிபரை மணந்து கொண்டு 2 வயது குழந்தைக்கு
தாயாகி இருக்கிறாள் .... என்பது செவிவழிச் செய்தி ..

கிருஷ்ணாவின் விடுமுறை, நாளையோடு முடிவடைகிறது... முன்பு போல் ராதா அதிகம் கலங்குவதில்லை என்றாலும் அவனுடைய பிரிவு அவளை வாட்டவே செய்கிறது .... அவனுடன் செலவழிக்கும் நாட்கள் தான், அவர்களது குடும்பத்திற்கு ஹோலி, தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ், ரம்ஜான் அனைத்துமே .


பெண்மை, தாய்மை, தேசத்தை மதிக்கும் எந்த ஒரு ஆண்மகனும் ,சிறந்த மனிதனாக கருதப்படுவான்...
பெண்மையை வெறும் உடலாக பார்க்காமல், தன் மகளாகப் பார்க்கும், ஒவ்வொரு ஆணுக்கும், வெற்றிகளை வாரி வழங்க, வெற்றி தேவதை காத்துக்கொண்டிருப்பாள் ....
நமது கதாநாயகன் கிருஷ்ணா, அனைத்து வெற்றிகளையும் பெற்று வாழ்வில் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துவோமாக!!!

சுபம்!!!


தேசத்திற்காக தன் சுக துக்கங்களை தள்ளி வைத்துவிட்டு எல்லையில் நிற்கும் ஒவ்வொரு வீரனும் கதாநாயகர்கள் ... அவர்கள் மட்டும் தான் கதாநாயகர்கள்....

அன்றாடம் அலுவலகம் சென்று திரும்பும் கணவன் மனைவிக்கிடையே இல்லாத புரிதல்கள், வருடத்தில் வெறும் 100 நாட்கள் மட்டுமே இணைந்திருக்கும் பாதுகாப்பு படை வீரர்களின் திருமண வாழ்வில் இருக்கும் அன்பும் காதலும் அளவில்லாதது ....

வாழ்வையும் சாவையும் அன்றாடப் பணியின் அங்கமாக சந்திக்கும், அவர்களது வாழ்வில் அன்பிற்கு என்றும் பஞ்சமில்லை ...

ஒவ்வொரு இந்திய பிரஜையும், நாட்டுக்காக எல்லையில் நின்று தேச சேவை செய்ய வேண்டிய அவசியமில்லை. குறைந்தபட்சம் எல்லையில் நிற்கும் ஒவ்வொரு வீரனின் குடும்பத்தினரையும் , நமது சகோதர சகோதரிகளின் குடும்பம் போல் பாவித்து அவர்களை அன்போடு அரவணைத்து நடத்துவதும் தேச சேவையே...
ஜெய்ஹிந்த்


என் இனிய சொந்தங்களுக்கு,


இந்தக் கதை என்னுடைய முதல் கதை.
முதலில் இந்த கதையை மீள் பதிவு செய்யும் எண்ணமே இல்லை.
அனேக வாசகர்கள் கேட்டதும், இந்தக் கதையை மீள் பதிவு செய்தால் தான் என்ன ....
என்ற எண்ணத்தில் தொடங்கியதுதான்
இந்த பயணம்.


இந்த கதை பயணத்தில் நீங்கள் கொடுத்து வந்த ஆதரவு அளப்பரியாயது.


நன்றிகள் பல.


ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்
 
Last edited:
Back
Top