Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 19

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 19

இருபத்தி இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு, அதிகாலையில் எர்ணாகுளத்தை வந்தடைந்தாள் ராதா.

பூனாவை போன்றே மிதமான காலநிலை கொண்ட நகரம் எர்ணாகுளம்.

நீண்ட ரயில் பயணம் அவளை சோர்வடைய செய்திருந்தாலும்,
"கடவுளின் சொந்த நாடு" என்றழைக்கப்படும் கேரளத்தின் பசுமையும் ,மென்மையான குளுமையும் அவளுக்கு புத்துணர்ச்சியை தந்தது .

அவள் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய பத்தாவது நிமிடம் ராஜேஸ்வரியிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் பயணத்தை தொடங்கியதிலிருந்து இந்த அழைப்புடன் சேர்த்து ஐந்து முறை அழைத்து விட்டார்.

ஒவ்வொரு அழைப்பிலும், ஏதாவது விடுபட்ட அறிவுரைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

ராதாவிற்கு உடல்நிலை,மனநிலை, புதிய சூழல் என பலவற்றை பற்றி அவர் வழங்கிய அறிவுரையில் அவரின் கரிசனமும் அன்பும் மேலெழுந்திருந்தது .

இப்படிப்பட்ட நல்ல ஆன்மாவை ஏமாற்றுகிறோமே என அவள் மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

இந்த உலகிலேயே அவள் கருவுற்றிருக்கும் செய்தியை அறிந்தால், அதிக ஆனந்தத்துடன் ஆத்மார்த்தமாக கொண்டாடும் ஒரே ஜீவன் அவர் தான்.

அவர் மட்டும் அவளின் நிலையை அறிந்திருந்தால் நிச்சயம் இந்த பயணத்திற்கு ஓத்துக் கொண்டிருக்க மாட்டார்.


" ஐ அம் சாரி அத்தை, எனக்கு வேற வழி தெரியல " என மானசீகமாக மன்னிப்பு கோரியபடி தொலைபேசியை காதுக்கு கொடுத்தவளிடம்,

" ராதா, கோபால் நாயரோட பேசினேன் அவர் இன்னும் பத்து நிமிஷத்துல , அங்க வந்து உன்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாரு... அப்புறம் உனக்குன்னு தனியா பார்த்து இருக்குற வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போவாரு ...தைரியமா இரு .. உனக்கு அந்த சூழ்நிலை பிடிக்கலன்னா உடனே பூனாவுக்கு திரும்பி வந்துடு சரியா...எனக்கு உன்னோட ஹெல்த்தும், சேஃப்டியும் தான் ரொம்ப முக்கியம்..."
என ராஜேஸ்வரி பேசிக்கொண்டே போக, அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது
எங்கு அழுது விடுவோமோ... என்று பயந்து "ம்ம்" என்ற ஒற்றை பதிலை கூறி ஒருவாறு சமாளித்து அழைப்பை துண்டித்தாள்.

ராஜேஸ்வரி கூறியது போல் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கோபால் நாயர் அங்கிருந்தார்.

வழுக்கைத்தலை, சிவந்த நிறம், வாட்டசாட்டமான உடல், அடர்த்தியான மீசை, சந்தனப்பொட்டு என கேரள வாசனையோடு காட்சியளித்த மனிதர் ராதாவை பார்த்ததும் "நமஸ்தே" என்று கைக்கூப்பி, கேரள நடிகர் மம்முட்டி, மோகன்லால் போன்று மலையாள நெடியுடன் தமிழ் பேச ஆரம்பித்தார்.

ராதாவும் அவருக்கு பதில் வணக்கம் செலுத்த, " எனக்கி தமிழ் ச்சரியா அறியில்லா " என்றவரிடம் அவள் சிரித்தபடி ,

" நீங்க இங்கிலீஷ்லயே பேசலாம் " எனக் கூறி ஆங்கிலத்தில் உரையாடல்களை தொடர்ந்தாள்.

கேரளாவின் பாரம்பரிய "நாலு கட்டு வீடு" போல் பெரிய வீடாக இல்லாமல், அதே சமயம் கேரள ஓடுகளை கொண்டு கூரைகள் வெய்து, சிறிய நாற்கர முனைகள், நடுவில் முற்றம், வீட்டை சுற்றி தோட்டம் என அழகான வீடாக கோபால் நாயர் வீடு அமைந்திருந்தது.

அரை மணிநேர பயணத்திற்குப் பிறகு இருவரும் வீட்டை அடைய
நாயரின் மனைவி அகல்யா மற்றும் அவரது இரு பெண்கள் வர்ஷா, லிதா ஆகியோர் ராதாவை எதிர்கொண்டு அழைத்தது ,அவளுக்கு ஒருவித கூச்சத்தை தர, நாயர் அவளை
ராஜேஸ்வரி மேடத்தின் மருமகள் என அறிமுகப்படுத்த ,அனைவரும் ஒருவித மரியாதையுடன் அவளை வரவேற்று கூடத்தில் அமரச் செய்தனர்.

அவளே ஆங்கிலத்தில் உரையாடலை தொடங்கியதால், அனைவரும் ஆங்கிலத்திலேயே பதில் அளிக்கத் தொடங்க, அகல்யா, ராதாவின் பிறந்த ஊர், படிப்பு ,தாய் தந்தை, உடன் பிறந்தவர்கள் என அவளை பற்றிய தகவல்களையும் ஆவலாக கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு குளித்து முடித்து மாற்று உடையில் வந்தவளுக்கு காலை உணவாக இடியாப்பமும் கொண்டைக்கடலை குருமாவும் பரிமாறப்பட, கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பிறகு தேங்காய் எண்ணெயின் மணம் நாசியை துளைக்க, உணவினை ரசித்து ருசித்து உண்டாள் ராதா.

நாயரின் மனைவி அகல்யா ஆசிரியராக பணிபுரிவதாகவும், மூத்த மகள் வர்ஷா சிஏ (CA )முடித்துவிட்டு அவர்களது நிறுவனத்திலேயே பணிபுரிவதாகவும், இளைய மகள் லிதா பொறியியல் படித்துக் கொண்டிருப்பதாகவும்,நாயர் தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்த, ஏனோ அந்த இளம் பெண்களை பார்க்கும் போது தன் தங்கை சுதாவின் நினைவு தான் ராதாவுக்கு வந்தது .

இரு பெண்களும் பார்ப்பதற்கு ஆடம்பரமில்லாத அழகுடன், தன்மையாக இருப்பது போல் அவளுக்கு தோன்ற, வர்ஷா ராதாவின் கூந்தலை பார்த்து

" எங்க கேரளா லேடிஸ்க்கு தான் முடி நீளமா இருக்கும்னு நினைச்சு கிட்டு இருந்தோம் ...ஆனா உங்க தலை முடி ரொம்ப அழகா பட்டு மாதிரி இருக்கு ..."
என தடவியபடியே கூற, அதற்கு லிதா

"திருஷ்டி போடாத" என குற்றம்சாட்ட, இவ்வாறாக இவ்விரு பெண்களின் உரையாடல்களை ரசித்தபடி தன்னை மறந்து சிரித்து கொண்டிருந்தாள் .

"எனக்கு ராஜேஸ்வரி மேடத்தை கடந்த 10 வருஷமா தெரியும், அவங்களை நேர்ல சந்திச்சிருக்கேன் , ஆனா உங்க ஹஸ்பன்ட் கமாண்டர் கிருஷ்ணாவை நான் பார்த்ததே இல்ல, ஆனா அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்...." என்ற நாயர்

" கமாண்டர் சார் எப்ப திரும்பி வருவாரு .." என்றார் ஆர்வமாக.

முதலில் பதில் கூற திணறியவள் பிறகு சமாளித்துக் கொண்டு

" நைன் மன்த்ஸ் ஆகும்னு நினைக்கிறேன்... " என வாயில் வந்ததை கூறிய போதும்

போகும் போது போயிட்டு வரேன்னு கூட சொல்லாம போனவரு, அப்படியே பூனாக்கு திரும்பி வந்தாலும் என்னை தேடியா இங்க வரப்போறாரு.... என்று நினைத்தவளின் மனதில் உடனே விரக்தி சூழ்ந்துகொள்ள,


உடல் பலவீனம், நீண்ட பயணம், தற்போதைய விரக்தி மனநிலை ஆகியவை ஒன்று சேர்ந்து அவள் முகத்தில் ஒருவித அயர்ச்சியை உண்டாக்க, அதனை கண்ட அகல்யா ,

" புது இடம் உங்களுக்கு பிடிக்கலையா ..ஏன் தான் வந்தோம்னு தோணுதா ..." என்றவரிடம் அவசரமாக மறுத்தவள்

" இந்த ஊரு ரொம்ப பிடிச்சிருக்கு ...இந்த பசுமையான சூழல் சுத்தமான காத்து, மனசுக்கு ஒருவித அமைதியை கொடுக்குது ...வாழ்நாள் முழுசும் இங்கேயே கழிக்கலாம்னு தோணுது , வேற எங்கேயும் போகணுங்கிற எண்ணமே வராது போல...லாங் ட்ராவல் அதனால தான் கொஞ்சம் டயர்டா இருக்கேன்.."

என அக்கணத்தில் மனதில் பட்டதை கூறிவளுக்குத் தெரியாது, அவள் கூறிய இரண்டு பதில்களும் எதிர்மறையாக தான் நடக்கப் போகிறதென்று.

" நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க ...சாயங்காலமா உங்களுக்குன்னு பார்த்த வீட்டுக்கு போகலாம் ..." என ராதாவை உறவினர்களுக்கான அறையில் தங்கச் வைத்தார் அகல்யா.

நீண்ட பயணத்தில் ஏற்பட்ட களைப்பால் படுத்ததும் உறங்கியவள் 3 மணி நேரத்திற்குப் பிறகு தான் உறக்கம் விழித்தாள்.

நேரம் பிற் பகலை காட்ட, அவள் குழந்தைக்கு பசி போலும் பசி வயிற்றைக் கிள்ளியது.

பல் துலக்கி, முகம் கழுவி அறையை விட்டு வெளியே வந்தவளை அகல்யா மதிய உணவிற்கு அழைத்து, அவள் சைவம் என்பதால் மோர்க்குழம்பு, அவியல், பருப்பு உசிலி என அனைத்தையும் ருசியாக சமைத்து பரிமாற,

" நீங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா .. "

" இப்பதான் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சோம் நீ நல்ல தூக்கத்துல இருந்ததால உன்னை எழுப்பல.."
என உரிமையாய் அகல்யா ஒருமையில் அழைத்ததை மனதில் மெச்சினாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க, கேரள புடவை அணிந்த பெண்மணி அங்கு வர,

" சின்னம்மை இவ்விட வரு " என மலையாளத்தில் அழைத்தவர்

" ராதா, இவங்க தான் சின்னம்மை ,எங்க வீட்டுல ரொம்ப காலமா எனக்கு வீட்டு வேலைக்கு உதவியா இருக்காங்க... உனக்கு பார்த்திருக்கும் வீடு கூட இங்கிருந்து மூணு தெரு தள்ளிதான் இருக்கு... இவங்க உனக்கும் உதவியா இருப்பாங்க அதனால தான் வரவழைச்சேன்..." என சின்னம்மையை அறிமுகப்படுத்தி வைக்க,
ராதா அவருக்கு பதில் வணக்கம் செலுத்த, அவளை உற்று நோக்கிய சின்னம்மை, "நினக்கு மளையாளம் அறியாம்" என கேட்க,
"அவள்க்கு கொறச்சு மாத்திரமே அறியு" என அகல்யா பதிலுரைக்க,
உடனே ராதா

" நீங்க மலையாளத்துலயே பேசுங்க... நான் தமிழ்ல பதில் சொல்றேன்... தமிழ் புரியுமில்ல " என புன்னகைத்தவாறே கேட்க,
" ம்ம்ம்ம்.... மனஸ்லாய்" என்றார் சின்னம்மை.

கேரளக் கூரை வெய்த, அழகான தனி வீடு. அவ்வீட்டிற்கு பின்னால் சிறிய குளம். வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம், தோட்டத்தைச் சுற்றி குளத்தை நோக்கி பாயும் நீரோடை, நீரோடையின் ஓரத்தில் அணிவகுத்து நின்ற தென்னை மரங்கள் என ரம்மியமான சூழ்நிலையில் ராதா தங்குவதற்காக பார்க்கப்பட்டிருந்த வீடு அமைந்திருந்தது .

அந்த வீட்டை அவளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. வீட்டிற்கு தேவையான அனைத்து மரச்சாமான்கள் மற்றும் சமையல் செய்வதற்கு தேவையான அனைத்து பண்டம் பாத்திரங்களும் தயார் நிலையில் இருந்தன.

சின்னம்மை மற்றும் நாயருடன் அகல்யாவும் உடன் வந்து தன்னாலான உதவிகளை செய்தார்.

இது நாயரின் நண்பர் வீடு எனவும்,அவர் குடும்பத்துடன் துபாய் சென்றிருப்பதாகவும், திரும்பி வருவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட காலம் ஆகும் என்பதால்,வீட்டை காலி செய்யாமல் அதனை அப்படியே வாடகைக்கு விடும்படி நாயரை கேட்டுக்கொண்டதாக அகல்யா தெரிவித்தார்.

ராதா சைவம் என்பதால் சைவ உணவுகளையே சமைக்கும் படி சின்னம்மையை அறிவுறுத்தி விட்டு ,ஏதாவது உதவி தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு ராதாவிடம் தெரிவித்து விட்டு நாயர் தம்பதியினர் விடைபெற்றனர்.

இரவு உணவிற்காக இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் உண்டவளுக்கு சின்னம்மையின் கைப்பக்குவம் ஓரளவிற்கு பிடித்தது என்றே சொல்லலாம். அனைத்து வேலைகளையும் முடித்த சின்னம்மை

" எனிக்க எந்தே வீட்டிலக்கு போகணும், எந்தே கொச்சுமக்கள் என்னே பிரதிக்ஷிக்ணு..." (நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்னுடைய பேரக்குழந்தைகள் எனக்காக காத்திருப்பார்கள் ) என சின்னம்மை கூற , முதலில் புரியாமல் திணறியவள் பிறகு, அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிறார் என்பதை அரைகுறையாக புரிந்து கொண்டு விடைகொடுத்தாள்.

பூனாவில் இருக்கும் வரை தன் கண்ணனின் நினைவிருந்தாலும், அவனுடைய அறையில் அவனுடைய படுக்கையில் படுத்துறங்கியதாலும், அவனுடைய அன்னையுடன், அவன் பிறந்து வளர்ந்த வீட்டில் வசித்ததாலும் அவன் பிரிவு அவளை அதிகம் வாட்டவில்லை.

ஆனால் இந்த புதிய மண்ணின் ரம்மியமான சூழ்நிலையில்,முதன் முதலில் தனிமையை உணர ஆரம்பித்தாள் ராதா .

அவள் காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தான் அவளுடைய கண்ணன்.

எங்கு திரும்பினாலும், நிற்பது போல், சிரிப்பது போல், ஒற்றை கண்ணை சிமிட்டுவது போல் என அனைத்து வடிவிலும் அவனே காட்சியளித்தான்.

அதிகம் பேசாதவன், அவள் ஆழ் மனதோடு அதிகம் உரையாடினான்.

இதனைத்தான் மகாகவி

" காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா " என அந்த கிருஷ்ணனை எண்ணி பாடினானோ.. என்றே அவளுக்கு தோன்றியது.

மனம் முழுவதும் நிலைகொள்ளாமல், அவனை எண்ணியே தவிக்க, அவன் கிளம்பி சென்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலான நிலையில், ராஜேஷ்வரியை ஒருமுறையாவது தொடர்பு கொண்டு தன்னைப் பற்றி விசாரித்திருப்பானா என்றெல்லாம் அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது.


கேரள மாநிலத்தின் புதிய கைபேசி எண்னை நாளை தான் பெற வேண்டும் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கையில், திடீர் நினைவு வந்தவளாய் ,

" கிருஷ்ணாவுக்கு போன் பண்ணி பேசினா என்ன ..." என
அவள் மனம் ஊக்க,

முதலில் அழைப்பு அவரை சென்றடையுமா, அப்படியே அடைந்தாலும் அதனை எடுத்துப் பேசும் நிலையில் இருப்பாரா ...போன்ற கேள்விகள் அடுக்கடுக்காய் அவள் மனதில் எழ,

இந்த வீட்டு தொலைபேசி எண் அவருக்கு தெரியாது, மேலும் அதிலிருந்து நாந்தான் அழைக்கிறேன் என்பதும் அவருக்கு தெரியாது, அப்படியே தெரியாமல் எடுத்து பேசினாலும்,

என்னால் தான் என் உடல்நிலை மற்றும் மனநிலையை பற்றிக் கூறமுடியுமா ....
உங்களுடைய குழந்தைக்கு தாயாகப் போகிறேன் என்பதை சொல்லத்தான் முடியுமா ....

ஒரு பலவீனமான நேரத்தில், அவரிடத்தில் என்னையே நான் இழந்ததை நினைவில் வைத்திருப்பாரா....

அவர் மீது கொண்ட காதலினால் தான் என்னை இழந்தேன் ...

அந்த இணைவை அவருடைய உடல் தேவையாக மட்டும் அவர் எண்ணியிருந்தால்.... ???? போன்ற மனதின் கேள்விகளால் கண் கலங்கி, யாருமில்லாத அந்த தனிமையில் வாய்விட்டே அழுதாள் .

பெண்களின் கர்ப்ப காலத்தில் ஒன்று தாயின் அன்பு வேண்டும் அல்லது கணவனின் அரவணைப்பு வேண்டும்,நான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை ,எனக்கு இரண்டுமே கிடைக்காமல் தவிக்கின்றேன் ..

அவருடைய கருவை சுமப்பது விட, அவர் மீதான காதலை சுமப்பது தான் , மிக கடினமாக உள்ளது.

திருமண பந்தத்தில் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றும் கூற முடியாது அப்படி கூறினால்

"தன்னெஞ் அறிய பொய்யற்க" என்று என்னுடைய மனமே என்னை சாடி விடும்.

அவர் கேட்டுக் கொண்டது போல் அவர் விரும்பிய விவாகரத்தை வழங்கிவிட்டால் அவருடைய வாழ்க்கையை அவர் விரும்பும் ரேஷ்மியுடன் மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வார்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோனின் ஊட்டத்தாலா அல்லது கிருஷ்ணாவின் மேல் கொண்ட காதலின் தாக்கத்தாலா... எதுவென்று பிரித்தறிய முடியாத உணர்வானது ஒரே ஒருமுறை அவனை பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணத்தை மேலோங்கி ஒலிக்கச் செய்யும் போதெல்லாம் பர்வதம் உரைத்த வார்த்தைகள் அவள் காதுகளில் அதைவிட அதிகமாக எதிரொலிக்கும்.


அவள் மனம் பர்வதம் கூறியது அனைத்தும் உண்மை என ஆமோதிக்க தொடங்கியது.

அதுமட்டுமில்லாமல் ராஜேஸ்வரியும் இதுதான் முதல் முறை கிருஷ்ணா அவனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு பதற்றமான சூழ்நிலையில் எல்லைக்குச் செல்வது என தெரிவித்ததையும் எண்ணிப்பார்த்தவளின் மனம்,

நீயும் கிருஷ்ணாவும் ஒரே அறையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து நாட்கள் ஒன்றாக தங்கி இருந்தும், ஒரே இரவில் உன்னுடன் ஏற்பட்ட உறவானது மறுநாளே அவனை போர் முனைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளிற்றே..

நீ அவனுடன் இணையாமல் இருந்திருந்தால் குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்கு அவன் அருகிலேயே இருந்து அவனைப் பார்த்துக்கொண்டாவது இருந்திருக்கலாம்.

மேலும் உனக்கு தாலிக்கொடி வாங்கிய இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் உன்னை விட்டு பிரிந்து போர் முனைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் உன்னுடைய ராசியால் அல்லவா ..

இப்போதும் அவனைத்தேடி தொடர்பு கொண்டு, இணக்கமாக பேசும் பட்சத்தில், அவனுக்கு வேறு ஏதும் ஆபத்து கூட நிகழலாம்.

உண்மையிலேயே உன்னுடைய காதல் தூய்மையானது என்றால்,நீ கடைப்பிடிக்க எண்ணிய அஞ்ஞான வாசத்தை கடைபிடி, காலமும் கடவுளும் உனக்கு உறுதுணையாக இருந்து உன்னை வழி நடத்துவார்கள் என அவளுக்கு அறிவுரை வழங்க,


புதிய வீடு, ஊதக்காற்று, தென்னங்கிளையின் அசைவுகள், நீரோடை சத்தம் ஆகியவை ஒருவிதமான அமானுஷ்யத்தை அவள் மனதில் தோற்றுவிக்க, உறக்கம் பிடிபடாமல் தவித்தவள், கடைசியில் குழல் விளக்கை எரிய விட்டே உறங்கிப் போனாள்.

அதிகாலை வேளையில், அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்தால், அங்கு சின்னம்மை நின்றுகொண்டிருந்தார்.


" டியூப் லைட் ஆப் செய்யான் மறன்னோ" ( டியூப் லைட் அணைக்க மறந்து விட்டீர்களா) என குழல் விளக்கை சுட்டிக்காட்டி சின்னம்மை கேட்க, அதனை சரியாக புரிந்து கொண்டவள்

" மறக்கல ...புது இடம் தூக்கம் வரல அதனால லைட்டை அணைக்கல.." என்றாள் .

அவளை பின்தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த சின்னம்மை, அவள் படுக்கையிலிருந்த அவளது திருமண புகைப்படத்தை கையிலெடுத்து பார்த்து

" நின்னல் ரண்டுபேரும் பரஸ்பரம் சிருஷ்டிக்கபெட்டவரான் " (நீங்கள் இருவரும் பொருத்தமான தம்பதியர்) என ஆள்காட்டி விரலை, கட்டைவிரலுடன் இணைத்து அருமை என்பது போல் சைகை செய்தவர்,

" நின்னலுடய விவாஹம் ப்ரணய விவாஹமானோ" ( உங்களது திருமணம் காதல் திருமணமா) என்றவரின் கேள்வி புரியாமல் விழித்தவளிடம்

அவர், நாணி கோணி வெட்கப்பட்டுக்கொண்டு

" நின்னலேட விவாஹம் லவ் விவாஹமா" என்றார்.

பிறகு புரிந்து கொண்டவள் வெளியே புன்னகைத்தாலும், உள்ளுக்குள் சிறு வலியுடன்,

" ஆமா.. எங்க மேரேஜ் லவ்(ஒன் சைடடு) மேரேஜ் தான் ... “ என
மனதிலிருப்பதை முழுவதும் கூறமுடியாமல், பாதி மறைத்து பாதி கூற,

அவளை உற்றுநோக்கி, "நின்னல் கர்ப்பிணியானோ" என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்து

" எப்படி கண்டுபிடிச்சீங்க ..."

"கர்ப்பத்தின்ரே கந்தம் எனக்கறியாம் .." (எனக்கு தாய்மைக்கான வாசம் தெரியும் ..) என்றவரை ஆச்சரியமாக பார்த்தவள்

" என் கணவர், இன்னும் ரெண்டு மாசத்துல வந்துடுவாரு ...இந்த நல்ல செய்தியை அவர் கிட்ட தான் முதல்ல சொல்லனும்னு நினைக்கிறேன் ... ஆனா நீங்க அதுக்குள்ளே கண்டுபிடிச்சிட்டீங்க..தயவு செஞ்சு இந்த செய்தியை வேற யார்கிட்டயும் இப்போதைக்கு சொல்ல வேணாம்..."
என கோபால் நாயரின் குடும்பத்தை மனதில் வைத்து அவள் கேட்டுக்கொள்ள,

" நீ எதைப் பத்தியும் கவலைப் படாத, எனக்கு ஒரு வீட்டுல நடக்கிற விஷயத்தை , மத்த வீட்டில சொல்ற பழக்கம் எல்லாம் இல்ல ... உன் கணவர் வர்ற வரைக்கும் , உன்னை என் பொண்ணு போல பாத்துக்குறேன் ... " என தன் தாய் மொழியில் அவர் கொடுத்த வாக்குறுதியை ஓரளவு சரியாக அவள் புரிந்துகொள்ள ,

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அவர் சென்றதும் ராதா குளித்து முடித்து அலுவலகத்திற்கு கிளம்பலானாள்.

அலுவலகத்திற்கு செல்லும் வழியில் புதிய கைப்பேசி எண்ணை பெற்று அதனை சுதாவிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பினாள்.
உடனே சுதாவிடமிருந்து அழைப்பு வர,
" அப்பா எப்படி இருக்காரு ...நீ எப்படி இருக்க சுதா ..."

" நாங்க நல்லா இருக்கோம் கா ..நீ ஏன் கேரளாவுக்கெல்லாம் போயி கஷ்டப்படற... நீ ராஜேஸ்வரி மேடத்தோட பூனால இருக்கும் போது எங்களுக்கு நிம்மதியாயிருந்தது ...சரி எப்ப கா ஊருக்கு வர .." என்றவள் கேள்விகளாய் அடுக்க, பதில் கூற முடியாமல் திணறியவள்

" சுதா, நம்மோட இக்கட்டான நேரத்துல, ராஜேஸ்வரி மேடம் நமக்கு உதவி இருக்காங்க ...இப்ப அவங்களுக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல ஏகப்பட்ட ப்ராஜெக்ட்ஸ் வந்திருக்குது ...இந்த டைம்ல என்னாலான உதவியை அவங்களுக்கு நான் செய்யறேன் ... அவ்ளோ தான்... தீபாவளிக்கு ஊருக்கு வரேன் .... "

" தீபாவளிக்கு இன்னும் எட்டு மாசம் இருக்குக்கா ... ஏன் ரொம்ப நாள் கழிச்சு வரேன்னு சொல்ற ..."

" சுதா, நடுவுல பெரிய பண்டிகை எதுவும் வரல ...நான் ஊருக்கு வரணும்னா மினிமம் 20 நாலாவது லீவ் எடுத்துக்கிட்டு வரணும் அதனாலதான் .. சரியா டேக் கேர் ..."

என ஒருவாறு சமாளித்தவளுக்கு நிச்சயம் தெரியும் அவளால் இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கூட செல்ல முடியாது என்று ... வேறு வழியில்லாமல் பொய் சொல்ல வேண்டிய நிலைமையை நினைத்து குற்ற உணர்ச்சியால் மனம் நொந்தாள்.

கேரள கிளையின் திட்ட இயக்குனராக பொறுப்பேற்றவள் , மூன்று குழுக்களையும் தனித்தனியே அழைத்து, அவர்களது திட்டத்திற்கான வரைவுகள், கால அளவு , பணிபுரிபவர்களின் பட்டியல் மற்றும் திட்டத்திற்கான செலவுகள் என அனைத்தையும் விரிவாக கலந்தாலோசித்து பல முக்கிய முடிவுகளை சேர்ந்த முதல் நாளே அமல்படுத்தினாள்.

அலுவலகத்திலிருக்கும் வரை வேலையின் காரணமாக அவளது கண்ணனை பற்றிய நினைவுகள் இல்லாமல் இருப்பவளுக்கு வீடு திரும்பியதும் அவனின் பிம்பங்கள் ஆங்காங்கே தெரிய, அவனைப் பற்றிய சிந்தனைகள் எழ ஆரம்பித்துவிடும்.

ஏதோ இழந்ததைப் போன்ற பரிதவிப்பு இருந்தாலும், புதிய பிரச்சனைகள் ஏதும் இல்லாமல், காலத்தை கடத்தினால் போதுமென நினைத்தவளை பார்த்து வருங்கால பிரச்சனைகள் கைகொட்டி சிரித்தன.


கண்ணனைத் தேடி ....
 
Back
Top