Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 18

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 18

ஜம்மு காஷ்மீரில் உள்ள 'கலுசாக்' என்னும் பகுதியில் நடைபெற்ற தீவிரவாதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவ ஆபரேஷன் நடத்த இந்திய அரசாங்கம் தயாராக இருந்தது.

ராணுவத்தில் சிறப்பு கமாண்டோ பிரிவுகள் நடத்தும் சர்ப்ரைஸ் தாக்குதலுக்கு பெயர் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்(துள்ளிய தாக்குதல்). சிறு பிசிறு கூட இல்லாமல் துல்லியமாக இலக்கை அழிக்க வேண்டும் என்பது பொருள்.

( முதல் சர்ஜிகல் ஸ்ட்ரைக் 2016, இரண்டாவது சர்ஜிகல் ஸ்ட்ரைக் 2019ல்
இந்தியாவால் நடத்தப்பட்டது. கதைக்கு வேண்டி இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெறுவதாக காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன) .

ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு தான் இவ்வகையான தாக்குதல் நடத்துவது குறித்து பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவ தளபதி, பாதுகாப்பு ஆலோசகர் போன்ற உயர்மட்ட குழுவால் விவாதிக்கப்பட்டு கமாண்டோ குழு அமைக்கப்பட்டது.

அந்த உயர்மட்டக் குழுவால் தலைமை கமாண்டோ அதிகாரியாக கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டதால் அவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


தாக்குதல் நடத்தப்படும் நேரம், இலக்கு , அதன் வரைபடம் ,எவ்வளவு நேரம் எத்தனை பேர் போன்ற விபரங்கள் பகிரப்பட்டு அதனை வைத்து அதிவேக தாக்குதலை அதிகாலையிலேயே நடத்த கமாண்டோ குழு முடிவு செய்தது.

எல்லை தாண்டிய தாக்குதல் என்பதால் போர் மூளும் அபாயத்தை உணர்ந்து, கவனமாக கையாளப்பட வேண்டி இந்திய அரசாங்கம் கிருஷ்ணாவை தேர்வு செய்து களமிறக்கியது.

அன்றிரவு அதாவது மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு மேல், நடக்கவிருக்கும் இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைகிற்கு "பராக்கிரம் நடவடிக்கை" (Operation Parakram) என்று பெயரிடப்பட்டது.

கிருஷ்ணாவின் மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.

மனதை ஒருநிலைப் படுத்தாமல் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி காண முடியாது.

105 கோடி மக்களின் உயிர், வாழ்வாதாரம் மற்றும் தேசத்தின் மானத்தைக் காப்பாற்றும் பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து மனதில் ஏற்றுக் கொண்டவன் , தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பெரிய பொறுப்பின் செயல்பாடுகளை மனதில் உரு போட்டபடியே குறுக்கு மறுக்காக நடந்துகொண்டிருக்கும் வேளையில், நினைவு வந்தவனாய், பையிலிருந்து அவன் மிகவும் ரசித்த, தன்னவளின் நீல நிறப் புடவையை எடுத்து, இரு கைகளாலும் குறுக்கி தன் மார்போடு அணைத்து முகர்ந்து சற்று நேரம்
அவனவளின் வாசம் உணர்ந்தவன், பிறகு அதே பையிலிருந்து தனது திருமண புகைப்படத்தையும் தேடி எடுத்தான்.

புகைப்படத்தில் வெட்கத்தை சுமந்துக்கொண்டு கன்னம் குழி விழ சிரித்த முகத்துடன் காட்சியளித்தவளின் நிழல் முகத்தை தடவி ரசித்தவன்,

கடவுளே.... என் ராதாவை சந்திக்கும் இன்னொரு சந்தர்ப்பம் என் வாழ்வில் வராதா .... அவன் மனம் கெஞ்சியது.

அன்றிரவு நடைபெற இருக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் அவனது போர் விமானம் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப் படலாம் அல்லது அவன் அவர்களது வெடிகுண்டிற்கு இரையாகலாம் என்றகின்ற நிலையில் வாழ்வின் கடைசி படியில் நின்றுக்கொண்டு, முதன்முதலாக வாழ்வை வாழ வேண்டும் என்ற ஆசையை கடவுளிடம் கோரிக்கையாக வைத்துக்கொண்டிருந்தது அவனது மனம்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றும் அவனுக்கு புதிதல்ல. இதற்கு முன்பு நடைபெற்ற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் போது எவ்விதமான எதிர்மறை எண்ணங்களுக்கும் இடமளிக்காமல் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றியை தன்வசம் ஆக்கிக் கொண்டவனுக்கு தற்பொழுது ஏற்படும் எண்ணங்களை எண்ணி அதிசயித்து தான் போனான்.

கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அவன் மனம் அவசரகதியில் அசை போட்டு பார்க்க ஆரம்பித்தது.

தாயின் உடல் நிலையை கருத்தில் கொண்டே பயணித்தவனுக்கு சற்றும் எதிர்பாராத நிலையில் திருமணம் நடைபெற, வேப்பங்காயாய் எண்ணியிருந்த திருமணம் கரும்புச் சர்க்கரையாய் இனிக்க ஆரம்பிக்க ,
தன்னவளுடன் வாழ்ந்த ஓர் இரவை மனம் பொக்கிஷமாய் சுமக்க, என அதிசயங்கள், வானவில்லின் நிறங்களை போல் வரிசையாக தோன்றி, தற்போது காணாமல் போனதை எண்ணி ஏங்கி தவித்தான்.


வாழ்க்கையின் வேர்கள் ரகசியமாக இருக்கும் வரையில் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.

போன மாதத்திற்கு முன் மாதம் யாராவது அவனிடம், கூடிய விரைவில் ஒரு பெண்ணிற்காக அவனது மனம், உடல், ஆன்மா அனைத்தும் ஏங்கும் என ஜோசியம் கூறியிருந்தால், கூறியவனை பார்த்து கைகொட்டி சிரித்திருப்பானே ஒழிய, ஒரு சதவிகிதம் கூட நம்பி இருக்கமாட்டான்.

ஆனால் இன்றோ தென்றலைப் போல் மென்மையாக அவன் வாழ்வில் வந்தவள், பாறையை போல் சம்மணமிட்டு அவன் மனதில் நிலைத்ததை எண்ணி அதிசயித்துதான் போனான்.

சுவாதியின் மறைவுக்குப் பிறகு அவன் வாழ்வில் காதல், கல்யாணத்திற்கு எல்லாம் இடமில்லை என்று முடிவெடுத்திருந்தவனுக்கு தற்போதைய நிலை வியப்பிலும் வியப்பைக் கொடுத்தது.

இதுவே அவன் உயிருடன் கழிக்கும் கடைசி இரவாக கூட இருக்கலாம், இந்த நிலையில்லா வாழ்க்கையில் கடவுள் அவனுக்கு அளித்திருந்த அருமையான சந்தர்ப்பங்களை தவற விட்டதை எண்ணி அவன் மனம் வேதனை கொண்ட நிலையில்

ஒவ்வொரு மனிதனின் நியாயமான ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றியே தீருவார் என உள்ளுணர்வு உரைக்க, அந்த நம்பிக்கையை உடும்பு பிடியாக பற்றிக்கொண்டு தனது காரியத்தில் முழுவீச்சாக இறங்கினான்.

ஸ்ரீநகரில் கிருஷ்ணா தங்கியிருந்த ராணுவ குடியிருப்பிலிருந்து புறப்பட்டு ராணுவ தலைமையகத்திற்கு சென்றடையும் பொழுது இரவு மணி ஒன்பதை தொட்டிருந்தது.


கிருஷ்ணாவுடன் மூன்று பேர் சேர்ந்த குழுவிற்கு ,ஏர் சீஃப் மார்ஷல் இஸ்ரேலில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒளிக்கதிர் மூலம் வழிகாட்டும் கருவியினை (Laser Guidance System) கொண்டு இந்திய எல்லை கோட்டினை(Line of Control) தாண்டி சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களில் மீது வெடிகுண்டுகளை வீச வேண்டிய இலக்கின் திசைகளை நிர்ணயிக்கும் தொழில்நுட்ப( தற்போது அதிநவீன முறையில் வேறுவிதமாக இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது) வழிகாட்டியை (Wizard) பயிற்றுவிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கு ராணுவத்தில் (Light Up) "லைட் அப்" எனப்படும் சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.

கிருஷ்ணாவின் குழுவிற்கு கொடுக்கப்பட்ட பணியும் இதுவேயாகும்.

உடலாலும் மனதாலும் சிறப்பு கமாண்டோ படையினர் எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பதால் இரண்டு மணி நேரத்தில் அந்த கருவியின் தொழில்நுட்பத்தை தெளிவாகக் கற்றுணர்ந்தனர்.

டெல்லியில் உள்ள தலைமையகத்திற்கு சிறப்பு கமாண்டோ குழு பயிற்சி அளிக்கப்பட்டு பதில் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதை ஏர் சீஃப் மார்ஷல் தெரிவிக்க , அரை மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவர்கள் பச்சைக்கொடி காட்ட, ஸ்ரீநகரில் இருந்து அன்றிரவு நான்கு பேர் கொண்ட, கிருஷ்ணா தலைமையிலான குழு "சீட்டா" (Cheetah) எனப்படும் ஒற்றைக் இஞ்சின் கொண்ட சிறிய ரக போர் விமானத்தில் கதவுகள் நீக்கப்பட்ட நிலையில் அடர்ந்த காட்டுப் பகுதியின் இருட்டுக்குள் ஊடுருவ தேவையான நைட் விஷன் கிளாசஸ், புல்லட் ப்ரூப் உடைகள் சகிதமாக பயணம் செய்யத் தொடங்கினர்.


இலக்கு குறித்தவுடன் வெடிகுண்டு வீசித் தாக்கப்பட வேண்டிய பகுதியை காட்ட ஒளிக்கதிர் மூலம் வழிகாட்டும் கருவியில் (Laser guidance system)இணைக்கப்பட்ட கருவிகள் பொருத்திய மிரஜ் 2000, ஜாகுவார் மற்றும் மிக்-21 வகை சிறிய ரக போர் விமானங்கள் பதில் தாக்குதலுக்கு தயார் நிலையில் முன்னதாகவே மேற்கு எல்லைப்பகுதியில் காத்துக்கொண்டிருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய எல்லையை தொடும் பொழுது (Line Of Control)பாகிஸ்தானில் இருந்து குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்க, BSF (border security Force) எனப்படும் எல்லை பாதுகாப்பு படை அமைந்துள்ள பகுதியில் தரையை ஒட்டியே பயணித்த "சீட்டா " போர் விமானத்திலிருந்து, எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் கருவிகள் வீசப்பட்டவுடன், கிருஷ்ணாவின் தலைமையிலான குழுவும் உடன் குதித்தனர், ஏனென்றால்
அவன் குழு இரண்டு கிலோமீட்டர் அதிகமாக பாகிஸ்தானை நோக்கி பயணம் செய்திருந்தாலும் போர் விமானத்தின் ஒலியைக் கொண்டே விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பார்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இலக்கை நிர்ணயிக்க அடர் காட்டுக்குள் நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவன் குழு இருந்ததால் உருமறைப்பு (camouflage) ( பனி சூழ்ந்த மலைப்பகுதியில் கண்கள் மூக்கு பகுதிகளை விடுத்து வெள்ளை நிற ஆடைகளை அணிவதும், இருட்டான சமவெளிப்பகுதியில் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டும், காடுகளில் இலை தழைகளை ஆடையாக அணிவதும் )செய்துக்கொண்டு அடர்ந்த காட்டை கடக்கவேண்டும் என்பதால் இலைகளால் ஆன உடைகளை
பிஎஸ்எஃப் ( BSF) படையினரிடமிருந்து பெற்று அணிந்துகொண்டு, தங்கள் பயணத்தைத் தொடங்க , போர் விமானத்தில் இருந்து ஆயுதங்கள் வீசப்பட்டவுடன் "சீட்டா " போர் விமானம் ஸ்ரீ நகரை நோக்கி புறப்பட ,பிஎஸ்எஃப் படையினர் அதனைத் எடுத்துக்கொண்டு, வேட்டுக்கள் இடும் பொழுது தப்பிப்பதற்காக பூமியின் அடியில் ஏற்படுத்திய சுரங்கத்தின் வழியாக பதுங்கிய நிலையில் வெடிகுண்டு வீச்சுக்காக காத்திருந்தனர்.


பொதுவாக சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை மூன்று குழுக்கள் சேர்ந்து கட்டமைக்கும்.

முதலாம் குழு - இலக்கை நிர்ணயம் செய்வது( கிருஷ்ணா தலைமையிலான குழுவின் பணி) .

இரண்டாம் குழு (பிஎஸ்எஃப்) - ராணுவ ஆபரேஷனின் போது தீவிரவாதிகள் தப்பி செல்லா வண்ணம் இலக்கினை சுற்றி தரை படையினரால் பாதுகாப்பு வளையம் அமைப்பது.

மூன்றாம் குழு - மிரஜ் 2000 ,மிக்-21 போன்ற போர் விமானங்களைக் கொண்டு இலக்கை நோக்கி 1000 கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவது.

ஒவ்வொரு பாதுகாப்பு படை வீரனும் கிட்டத்தட்ட எழுபது கிலோவிற்கு நிகரான உடைகள்,ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றை சுமந்துகொண்டு எதிர் தாக்குதலுக்கு தயாரான நிலையில் அடர் காட்டுப்பகுதியில் பயணிக்க வேண்டும்.

பொதுவாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சியில் இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4000 கலோரிகள் கொண்ட உணவுகள் வழங்கப்படும்.

அவற்றில் பெரும்பாலும் மாட்டு இறைச்சி, கோதுமை உணவுகள், நெய், சர்க்கரை ,உருளைக்கிழங்கு போன்றவைகள் பிரதானமாக இருக்கும்.

பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் போரின் போது ,காட்டுப் பகுதியில் கிடைக்கும் பழங்கள், தண்ணீர் என கிடைத்தவற்றை கொண்டும், சில சமயம் போர் நடைபெறும் இடத்திற்கு அருகிலிருக்கும் கிராமத்தில் கிடைப்பவற்றை பெற்றும் பசியாற வேண்டும் .

சிறப்பு கமாண்டோ படையினருக்கு காட்டாற்று வெள்ளத்தை கடப்பது, வனவிலங்குகளை கையாள்வது, மலையேறுதல் போன்றவற்றில் ஆண்டு முழுவதும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுவர்.

இந்நிலையில் கிருஷ்ணாவின் தலைமையிலான குழு பாதைகள் இல்லாத அடர்ந்த காடுகளைக் கொண்ட மூன்று மலைகளை இரண்டு மணி நேரத்தில் சராசரியாக ஏழு கிலோமீட்டர் என்ற விகிதத்தில் 16 ஆயிரம் அடி உயரமுள்ள மலையை கடக்க வேண்டும்.

உடலை உறையச் செய்யும் குளிரும், இருட்டான பாதை, மிகக் குறைந்த ஆக்சிஜனை கொண்ட மெல்லிய காற்று என அனைத்தும் ஒன்று சேர்ந்து உடலை வருத்தினாலும்,

"கொக்குக்கு ஒன்றே மதி " என்பது போல், அனைத்து சிரமத்தையும் கடந்து ஒளிக்கதிர் வழிகாட்டும் கருவியை கொண்டு (Lazer guidance system) மனித தலை முடியை விட மெல்லிய ஒளிக் கதிரை பாய்ச்சி இலக்கை வெற்றிகரமாக நிர்ணயித்தனர்.

கிருஷ்ணாவின் குழு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை தெரியப்படுத்திவிட்டு
சிறப்பு படையினரின் போர் விமானங்கள் , குண்டு மழை தாக்குதல்களை துவங்கும் வரை, கரும் இருட்டான பதுங்கு குழியில், லாந்தர்(Lantern) விளக்கு எனப்படும் மெல்லிய விளக்கின் மேல் கரும் தாளைக் கொண்டு மூடி, வெளிச்சம் வெளியே பரவாமல் மங்கிய வெளிச்சத்தில் பதுங்கியிருந்தனர்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்டது தெரிந்தும் கடும் பனி மற்றும் குளிர்ந்த காற்றால், சிறப்புப் படையினரால் தாக்குல் நடத்த போர் விமானத்தை இயக்க முடியாத நிலையில் காலநிலை மாற்றத்திற்காக காத்திருக்க, வெளியே பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தை கேட்ட படி, உயிரை கையில் பற்றிக்கொண்டு பதுங்குகுழியில் கிருஷ்ணாவின் குழு சிறப்பு படையினருக்காக காத்திருந்தனர் .


ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மிராஜ் 2000 ரக போர் விமானம், தொடுவானத்தில் மூழ்கி பாகிஸ்தானின் கெல்(Kel) மற்றும் குப்வாரா(kupwara) பகுதியிலுள்ள அனைத்து பதுங்கு குழிகள் மற்றும் தீவிரவாதிகளின் முகாம்களின் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.

இந்த அதிரடித் தாக்குதலில் கிட்டத்தட்ட 38 தீவிரவாதிகள் மற்றும் 7 தீவிரவாத முகாமும் அழிக்கப்பட்டன.

அதிகாலை இரண்டரை மணிக்கு தொடங்கிய வேட்டை மூன்று மணிக்கு வெற்றிகரமாக கிருஷ்ணாவின் தலைமையில் முடிவடைந்தது.

இந்த எதிர்பாராத வான்வழி தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான் முதலில் திணறி பின்னர் சுதாரித்துக் கொண்டு பிஎஸ்எஃப் படையினர் இருக்கும் Loc பகுதியல் துப்பாக்கிச் சூட்டை தொடங்க, முன்னதாகவே தயாராக இருந்த பிஎஸ்எஃப் வீரர்கள் சுற்றிவளைத்து கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் திணறி துப்பாக்கிச்சூட்டை கைவிட்டது.

எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்த கிருஷ்ணா தலைமையிலான குழு மீண்டும் அதே நீண்ட மலை பாதையை கடந்து இந்திய ஆர்மியின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு திரும்பினர்.

அவன் நிகழ்த்தியது உலக சாதனையை விட பெரியது. அது எதுவும் அவன் மனதில் நிற்கவில்லை. முழு ஆண்டு தேர்வு முடிந்ததும் விடுமுறைக்கு காத்திருக்கும் குழந்தைகள் போல, உயிருடன் திரும்பி விட்டோம் கூடிய விரைவில் மனையாளை சந்திக்கப் போகின்றோம் என்ற எண்ணமே அவனை குதூகலித்தது.

அந்தக் கொடும் குளிரில், அவன் தங்கியிருந்த ராணுவ குடியிருப்பில்
ரசாய் கொண்டு கூட உடலை மூடிக் கொள்ளாமல், மனையாளின் புடவை ஒன்றே அந்த குளிருக்கு போதுமானதாக தோன்ற, அதனை உடல் முழுவதும் போர்த்திக் கொண்டவனுக்கு,
தன் ராதையின் ஒவ்வொரு முக பாவமும் மனக்கண்ணில் வந்து போயின.

முதன் முறையாக அவளை பார்க்கும் பொழுது, பொறுமையும் மென்மையும் அந்தக் குழந்தை தனமான முகத்தில் போட்டி போட்டது,
விஷால் குழுவினரோடு கன்னம் குழி விழ நகைத்தது,
மூக்கு நுனி சிவக்க அவனிடம் கோபப்பட்டது, அவன் அடிப்பதும் கன்னம் சிவந்து கண்கலங்கியபடி அவனை வெறித்துப் பார்த்தது,
முதல் முத்தத்திற்கு பிறகு அவள் முகத்தில் கொப்பளித்த நாணத்தை மறைக்க முயன்றது, கடைசியாக அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு

"எப்ப திரும்பி வருவீங்க..." என்றது வரை சினிமா பட காட்சிகளாய் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டி வர
மனதிற்குள் ரசித்து சிரித்தவன்

" இதோ வந்துட்டேன் கண்ணம்மா ..."
என்றான் தன்னிலை மறந்து வாய்விட்டே.


மறுநாள் இவர்கள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பதிலடி கொடுக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவிக்க,
எந்நிலையிலும் போர் மூளும் அபாயம் இருந்ததால் தனது குழுக்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்காக பயிற்சி முகாமிற்கு செல்லுமாறு கிருஷ்ணாவிற்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


கண்ணனைத் தேடி ...
 
Back
Top