Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 16B

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
544
அத்தியாயம் 16B


கார் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் இருவரின் எண்ணங்களும் வெவ்வேறு திசை நோக்கி பயணிக்கத் தொடங்கின.

இவளுக்கு ஏன் என் மீது இப்படி ஒரு நம்பகமற்ற தன்மை , என் காதலை ஏன் உணர மறுக்கிறாள், ஒவ்வொருமுறையும் நான் என் அன்பினை செய்கையால் நிரூபிக்கிறேன்,ஆனால் அவள் ஒருமுறைகூட என்னிடம் இணக்கமாக நடந்து கொள்ளவில்லையே.


விஷாலிடமிருந்த நம்பிக்கை என்னிடம் இல்லையா... ஒருவேளை நான் எண்ணியது போல், இவள் விஷாலை நேசிக்கிறாளா... அப்படி என்றால் சற்று நேரத்திற்கு முன்பு என்னுடன் இணைந்து ஆத்மார்த்தமாக நடனமாடியது காதல் இல்லாமலா ... அடுத்த மாத இறுதிக்குள் வீட்டை விட்டு சென்று விடுவாளா? அப்படி செல்லத்தான் நான் விட்டு விடுவேனா? ஆக்ஷன் ஸ்பீக்ஸ் லவ்டர் தேன் வேட்ஸ்(action speaks louder than words) .. என இவள் படித்ததில்லையா. எது எப்படி இருந்தாலும் இன்று இரவு இவளிடம் மனம் விட்டுப் பேசியே ஆகவேண்டும் ....என அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில்,


ராதா,
அன்று ரேஷ்மி வீட்டிற்கு வந்திருந்த போதும் என்னிடம் கூறவில்லை, இன்று அவளை விழாவில் சந்தித்ததையும் என்னிடம் சொல்லவில்லை , ஆனால் இவருக்கு , விஷால் எதற்காக வீட்டிற்கு வந்தான் என்று விசாரணை கமிஷன் அமைத்து விவரம் மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் ...இவர் மனதில் உண்மையிலேயே என்னை மனைவியாக ஏற்றிருந்தால் , அன்று மொட்டை மாடியில் பேசியதற்கு மறுப்பல்லவா தெரிவித்திருக்க வேண்டும்... சில நேரம் நெஞ்சுக்கு இனிமையாக நெருங்கி வருகிறார்,பலநேரம் புரியாத புதிராக இருக்கின்றார்.....


ஆனால் எது எப்படி இருந்தாலும் என்னால் இவரை மருந்து அளவிற்குக்கூட வெறுக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை.


இவரே கேட்டுக்கொண்டதால் இவரை இவருக்காகவே விட்டுக்கொடுப்பேன்... என வேறுமாதிரியாக சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டை அடைந்ததும், முதலில் காரை விட்டு இறங்கியள், அவன் காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு வருவதற்கு முன், அறையை வந்தடைந்து குளியலறைக்குச் சென்று முகம் கழுவி இரவு உடைக்கு மாறி, இரவு விளக்கை எரிய விட்டு தன்னுடைய திவானுக்கு சென்று படுத்துக் கொண்டாள்.

அறையில் நுழைந்தவன், இரவு விளக்கு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து களைப்பின் காரணமாக உறங்கச் சென்று விட்டாள் என்றெண்ணிய படியே அவனும் குளியலறைக்குச் சென்று இரவு உடைக்கு மாறி படுக்கையில் விழுந்தான்.


அன்று முழுவதும் ஏற்பட்ட வெவ்வேறு நிகழ்வுகளின் தாக்கத்தால் உணர்வின் பிடியில் சிக்கி உறக்கம் வராமல் அலைக்கழிக்கப்பட்டனுக்கு நேற்றிரவு அவள் அவன் கை வளையத்திற்குள் உறங்கியது, சற்று நேரத்திற்கு முன் இருவரும் இணைந்து நடனமாடியது போன்ற நிகழ்வுகள் அவன் கண்முன் விரிந்து அவனை முழுவதுமாய் ஆட்டிப்படைத்தன.



ராதாவின் மனநிலை, கிருஷ்ணாவின் நிலையைவிட மோசமாக இருந்தது.

என்னுடைய கிருஷ்ணா ... என்ற எண்ணமே அவள் மனதில் மேலெழுந்திருக்க அவனை விட்டுக்கொடுக்கவும் முடியாமல், கட்டி அணைக்கவும் முடியாமல், உறக்கம் பிடிபடாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய், அவள் நல்ல உறக்கத்திலிருப்பாள் நேற்றிரவு போல் அவளை தூக்கி வந்து, கை வளையத்திற்குள் வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணி, அருகில் சென்று அவளை தூக்க முற்படும் போது, அவளுக்கு இருந்த இடத்திலிருந்து எங்கோ பறப்பது போன்ற உணர்வு எழ, கண்களை விழித்து பார்த்தவளுக்கு அவளை கையில் ஏந்தியபடி ,இரவு விளக்கு ஒளியில் அவன் முகம் அருகில் தெரிய, மறுப்பேதும் கூறாமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களில் காதலைக் கண்டவன், அவளை மெல்ல பூ போல் சுமந்து வந்து, தன் கட்டிலில் கிடத்தி, அவள் மேல் கொடியாய் படர்ந்தான்.

இருவரும் வெவ்வேறு சிந்தனையிலிருந்து மாறி ஒரே இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்க,அவளின் ஒவ்வொரு அணுவும் அவனுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர ஆரம்பித்தாள் ராதா .


கிருஷ்ணா ஒன்றும் பெண்ணையே அறியாதவன் அல்ல. அவன் சுவாதியுடன் ஓருடல் ஈருயிராக வாழ்ந்த காலத்தில் அவளிடம் உணராத மென்மையான பெண்மையை, பெண்மையின் ஊற்றாய் விளங்கிய ராதாவிடமறிந்து அவளை முழுவதுமாய் ஆட்கொண்டான்.


அவள் அவனிடம் காட்டிய இணக்கம் அவனுக்கு ஆச்சரியத்தை விட அவளின் அனுமதித்தலையே உணர்த்த, இணைவின் போது அவன் காட்டிய மென்மை , அவனின் கம்பீரம் கலந்த ஆண்மை,அவனுக்கே உரித்தான வாசம் என அவனைப் பற்றி அனைத்தும் அவள் அறிந்து கொண்ட இரவாக அது அமைந்து போனது.
ஒரு பரிபூரண ஆணிடம் மென்மையான பெண்மை தன்னை இழப்பது இயல்பே என்பதையும் புரிய வைத்தது.


இருவரும் மெய் இன்பத்தில் மூழ்கி, இணைந்து, பிணைந்து, கலந்து களைத்தனர்.


அன்பை அடிப்படையாய் கொண்ட இனிமையான சங்கமம் ஒன்று அங்கு அருமையாக அரங்கேறியது.

"தலைசிறந்த காமம் என்பது ஆகச்சிறந்த காதலின் உச்சக்கட்டம்" என்பதை இருவரும் உணரும் வகையில் அன்றிரவு அமைந்தது.

அவளுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வர, அவளை இறுக்கி அணைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தவனிடமிருந்து,அவன் உறக்கம் கலைக்காமல் மெல்ல விலகி,கட்டிலிலிருந்து இறங்கியவள், அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அவன் முகத்தில் தெரிந்த நிம்மதியை ஓரிரு நொடி நின்று ரசித்துவிட்டு, பிறகு குளியலறைக்குள் நுழைந்தாள்.


குளியலறை நிலைக்கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு, ஏதோ புதுவிதமான அழகு கூடியது போன்ற உணர்வு தோன்றியது.

அன்று திங்கட்கிழமை என்பதால் அலுவலகம் செல்லும் முன் வங்கிக்குச் சென்று தங்கையின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்திவிட்டால் அவளுக்கு உபயோகமாக இருக்கும் என்றெண்ணியபடியே, துரிதமாக குளித்து முடித்து அவளுக்கு மிகவும் பிடித்தமான ஆகாய நீல நிறத்தில் புடவை அணிந்து ராஜேஸ்வரியை பார்ப்பதற்கு அவர் அறைக்குச் சென்றாள்.

அவளின் புதுப்பொலிவு அவர் கண்களுக்கு புலப்பட, அவர் ஒருவித ஆர்வத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, வெட்கப்பட்டுக் கொண்டு நேருக்குநேர் அவரை பாராமல், வேறெங்கோ பார்த்தபடி அவர் கேட்ட கர்னல் வீட்டு திருமண விழாவை பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு, அலுவலகத்திற்கு புறப்பட்டாள்.

உறக்கத்திலிருந்து விடுபட்ட கிருஷ்ணாவுக்கு நேற்றைய நினைவுகள் மனதினில் துளிர்க்க, கண்களைத்திறவாமல், தனது படுக்கையில், வலது கையால் துழாவி தன்னவளை தேட ,அவள் அங்கு இல்லை என்றுணர்ந்து குளியலறையை பார்த்தால் அதன் கதவும் திறந்தே இருக்க


ஏனோ எழுந்தவுடன் அவளை அணைத்துக் கொள்ள வேண்டுமென்று அலைபாய்ந்த மனதை அடக்கிய படி, குளியலறை நோக்கி செல்ல எத்தனிக்கும் போது,
அவன் நேற்று அவளிடம் கொடுத்த நகைப் பெட்டி கண்களில் படுமாறு மேஜையின் மேலிருக்க, அதில், அனைத்து நகைகளும் அதற்குரிய இடத்தில் பொருத்தப்பட்டிருப்பதை திறந்து பார்த்து அறிந்துகொண்டவனுக்கு அவன் மனதை சூழ்ந்திருந்த காதல் மறைந்து கோபம் துளிர்க்க ஆரம்பித்தது.


இவ என்னை புரிஞ்சுக்கவே மாட்டாளா .... இந்த நகைகள் ஒன்னு அவ பீரோல இருக்கணும் இல்ல அவ போட்டுக்கிட்டு இருக்கணும்... அத விட்டுட்டு என் கண்ணுல படறா மாதிரி மேஜை மேல எதுக்காக வச்சுட்டு போயிருக்கா.... என்று கோபத்தில் புலம்பியபடி குளியலறைக்குச் சென்றவனுக்கு
என்னதான் அவள் மேல் கோபம் இருந்தாலும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்டிப் படைக்க ,குளித்துமுடித்து ஆகாய நீல நிறத்தில் டி-ஷர்ட்யை அணிந்து கொண்டு(அன்று அவள் அணிந்திருந்த புடவையின் நிறமும் அதுதான் என தெரியாமலே) கீழ் தளத்திற்கு சென்று தன்னவளை தேடலானான்.

பர்வதம் மற்றும் தியாகராஜன் அன்றிரவு ரயில் பயணத்தில் குன்னூர் செல்லவிருப்பதால், அதனை பற்றி ராஜேஸ்வரியிடம் பேசிக் கொண்டிருக்க, மகி காலை உணவினை கர்ம சிரத்தையுடன் தயார் செய்து கொண்டிருக்க, ராதாவை பற்றி யாரிடம் கேட்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே எங்க கல்யாண வாழ்க்கையோட லட்சணம் எல்லாருக்கும் தெரியும் ... இப்ப யார்கிட்டயாவது போயி ராதா எங்கன்னு கேட்டு கேவலப்படணுமா.... என மனதில் புலம்பிக் கொண்டிருக்கும் போதே ராஜேஸ்வரி அவனை அழைத்து,

" கிருஷ்ணா உனக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆயிடுச்சு, இன்னும் ராதா வெறும் மஞ்ச தாலியைதான் போட்டுகிட்டு இருக்கா...வர வெள்ளிக்கிழமை தாலி பிரிச்சு கோர்க்கிற சுபத்தை செய்திடலாம்னு நினைக்கிறேன் ... நீயே இன்னிக்கு கடைக்கு போய் உனக்கு பிடிச்ச மாதிரி தாலிக்கொடியை வாங்கிட்டு வந்துடு .... ராதாவுக்கு தெரிஞ்சா இதுக்கு சம்மதிக்க மாட்டா...இன்னிக்கு அவ ஆபீஸிலிருந்து வர்றதுக்குள்ள புது தாலி வாங்கிட்டு வந்துடுபா..." என அவனுக்கு தேவையான பதிலைக் கூறிக்கொண்டிருந்தார் .


சனிக்கிழமை நடந்த சம்பவத்திற்கு பிறகு அவனுக்கும் அவள் வெறும் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டிருப்பது உறுத்திக்கொண்டே இருக்க, தன் அன்னையின் இந்த ஏற்பாடு மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்றெண்ணியவனிடம்,

" மதியம் 12 மணிக்கு மேல நல்ல நேரம், அப்ப போய் வாங்கு கிருஷ்ணா .."

"சரி அம்மா " என்றான் மைந்தன்.

ராஜேஸ்வரி பாரம்பரியமாய் நகைகள் வாங்கும் அந்த பெரிய நகைக் கடையில், அரை மணி நேரமாக அலசி, ராதாவின் சங்கு கழுத்துக்கு பொருத்தமான தாலிக்கொடியை,தன் கற்பனையிலேயே பொருத்திப் பார்த்துத் தேர்வு செய்தான் கிருஷ்ணா.


மேலும் அவள் வெண்டை விரலுக்கு மோதிரம் வாங்க வேண்டுமென்ற ஆசை எழ, இரண்டாவது தளத்திலிருந்த மோதிர பிரிவில் அவனுக்காக ஆச்சரியம் காத்துக்கொண்டிருப்பது தெரியாமல் உற்சாகத்துடன் அங்கு சென்றவன் மோதிர பிரிவின் வாயிலிலிருந்த ஜன்னலின் வழியாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய முற்படும் போது, ராதா விஷாலுடன், பேசி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு

இவ ஏன் இங்க வந்தா...அதுவும் இவன் கூட ...
என பற்களை நறநறவென கடித்தான்.



என் கிட்ட கூட சொல்லிக்காம,அவசரமா ஆபீஸ்க்கு வந்தது இதுக்கு தானா...
என அவளிடம் கேட்க நினைத்து, ஓர் அடி எடுத்து வைத்தவன்,

இம்முறை பார்த்தது, விஷாலின் பின்புறம் நின்றிருந்த ஷாகிராவை.


அவள் விஷாலுக்கு அருகில் வந்து அவன் கையுடன் தன் கையை இணைத்து அதில் இருவரும் அணிந்திருந்த ஒரே மாதிரியான மோதிரத்தை ராதாவிடம் காண்பித்து கருத்தை கேட்க, அதற்கு அவளும் அருமை என்பது போல் ஆள்காட்டி விரலை கட்டைவிரலுடன் ஒன்றிணைத்து காட்டிக்கொண்டிருந்தை பார்த்தபின் கூனிக் குறுகிப் போனான்.

நான் உன்னை தவறாக நினைக்கும் போதெல்லாம்..
நேர்மையாய் இருந்து மன்னிப்பு கோரும் தண்டனையை எனக்கு தந்து கொண்டே இருக்கிறாய் ...
*******
என்னை மன்னிப்பதற்காகவே
மானுடம் எடுத்து வந்தவளா நீ...
******
எது என்னை உன்னிடத்தில் பித்து பிடிக்க வைத்தது என்று தெரியவில்லை... அது எதுவாகி விடினும் என் பித்து மட்டும் தெளிவதாய் இல்லை
******
கவர்ச்சியோ!
பருவக்கோளரோ!
காமமோ!
பிரியமோ!
பாசமோ!
நம்பிக்கையோ!
காதல் காதலேதான்!
******
நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது!இது நிஜமா? என நான் என்னை பரிசோதிக்கும் நாள் மட்டும், வரவேகூடாது!

என அவன் மனம் மானசீகமாக அவளிடம் மன்னிப்புக் கோர, ஏனோ அவன் மனதில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடிய நிலையில், அதே ஆனந்தத்துடன் மோதிர பிரிவின் உள்ளே நுழைந்தவனை, முதலில் விஷால் பார்க்க, அவனைத் தொடர்ந்து ஷாகிரா மற்றும் ராதா திரும்பி பார்த்தனர்.

ராதாவை பார்த்துக் கொண்டே அவளை நோக்கி கிருஷ்ணா நடந்து வர, முதலில் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தில் இருந்தவளுக்கு, அவன் அவளருகே நெருங்கி வர வர, வெட்கமும் சூழ்ந்துகொண்டது.

"ஹலோ, கமாண்டர் சார் , ஹவ் ஆர் யூ ", என விஷால் கிருஷ்ணாவிடம் கை குலுக்க ,
பதிலுக்கு அவனும் விஷாலிடம் நலம் விசாரிக்க,

அப்போது விஷால் அவனுடைய திருமணம் அடுத்த மாதம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் சாஹிராவை வருங்கால மனைவி எனவும் அறிமுகப்படுத்திவிட்டு


" இன்னிக்கு நல்ல நாள் அதனால ரெண்டு பேரும் வெட்டிங் ரிங்குக்கு அட்வான்ஸ் கொடுக்கலாம்னு வந்திருக்கோம்..." என்று நகை கடைக்கு வந்ததையொட்டி தன்னிலை விளக்கம் அளித்தான்.

ராதாவை உரசியபடி நின்று கொண்டிருந்த கிருஷ்ணா,
"நானும் எங்களுக்கு மோதிரம் வாங்கத்தான் வந்தேன் " என சர்வசாதாரணமாக அவள் தோள் மீது கைபோட்டு, அணைத்தவாறு கூற, அவனின் செயல், விஷால் முகத்தில் ஆச்சரியத்தை தோற்றுவிக்க, கண்ணிமைக்கும் நொடியில் தன் முகமாற்றத்தை விஷால் மறைக்க முயன்றாலும் கிருஷ்ணாவின் கண்கள் கணநேரத்தில் கண்டுபிடித்தன.

ராதாவிடம் மோதிர மாதிரிகளை தேர்ந்தெடுக்கச் சொன்னால், தனக்கு எதுவுமே வேண்டாமென்று ஆரம்பித்து விடுவாள், இப்போதுதான் சிரமப்பட்டு சரிந்த மதிப்பை தூக்கி நிறுத்தி இருக்கிறேன்... என மனதில் நினைத்தவாறு நகை கடைக்கார சிப்பந்தியிடம் வைரக்கற்கள் பதித்த திருமண மோதிர மாதிரிகளை காட்டுமாறு அவளை உரசியவாறே அவன் கேட்க, அவனிடமிருந்து விலகவும் முடியாமல்,அங்கேயே நிற்கவும் முடியாமல் வெட்கத்தால் அவள் முகம் செந்நிறமானது .

மோதிர மாதிரிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த கொண்டிருந்தவனிடம் விஷால்

" கமாண்டர் சார், இந்தியன் ஆர்ம்டு போர்ஸ்ல ஒர்க் பண்றவங்க வேற ஏதாவது நகைகள் போட்டுக்க முடியுமா..... "


" நாங்கள் வாட்ச் அண்ட் வெடிங் ரிங்கை போட்டுக்கலாம் ...
ஆனா சில நேரம் செக்யூரிட்டிகாக அத கூட கழட்டி வைக்க வேண்டிய நிலைமை வரும் ... " என பதிலளித்தவாறே, வைரக்கற்கள் பதித்த சிறு இதயத்தின் மத்தியில் மாணிக்கக் கற்கள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட மாதிரியை தேர்ந்தெடுத்தவன், ராதாவிடம் குரலைத் தாழ்த்தி

" உனக்கு பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு "என அழுத்தமாகக் கேட்ட விதத்திலேயே அவன் மனதை அறிந்து கொண்டவள்,
" ம்ம், பிடிச்சிருக்கு " என மென்மையாக பதிலளிக்க, கடைக்கார சிப்பந்தியிடம் அவர்கள் இருவரின் விரல் அளவுகளையும் கொடுத்துவிட்டு மோதிரத்திற்கான செலவினை கணக்கிட்டு பணத்தை கொடுக்க, அடுத்த மாத இறுதியில் மோதிரத்தை தருவதாக கூறி நகைக்கடை மேலாளர் ரசீதை கொடுக்க அதனை ராதாவிடம் கொடுத்து "வச்சுக்கோ" என்றவன்

விஷாலிடம்,

" நான் ராதாவை என்கூடவே கூட்டிகிட்டு போறேன் ...உங்க கல்யாணத்துல மீட் பண்றேன் கங்கிராஜுலேசன்ஸ்..." எனக் கூறிவிட்டு அவளை பார்க்க,அவள் பதில் ஏதும் கூறாமல் அவனை பின்தொடர்ந்து காரில் ஏறி அமர்ந்தாள் .

" அம்மா உனக்கு தாலிக்கொடி வாங்கிட்டு வரச்சொன்னாங்க.... " என அவன் காட்ட,


"எனக்கு இதுவே போதும் " என்றவளின் தயக்கத்திற்கான காரணம் புரியாததால்
இதுதான் தருணம் இப்போதே இவளிடத்தில் மனம் திறந்து பேசி விடவேண்டும் என்றெண்ணி, காரை ஓட்டியபடியே பேச்சை தொடங்க எத்தனிக்கும்போது, அவன் கைபேசி சிணுங்க, தலையணி(head phone) அணிந்துகொண்டு ,பேசத் தொடங்கியவனின் முகத்தில் பதற்றம், சோகம் ,ஏமாற்றம் என அனைத்தும் கலந்த கலவையாக முகம் மாற


"எஸ் சார், ஓகே சார், ஐ வில் ரெஸ்யூம் மை ட்யூட்டி சார் " என ஆங்கிலம் மற்றும் மராத்தியில் பேசியபடி வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்கு வந்தவன் வேகமாக ராஜேஸ்வரியின் அறைக்குள் நுழைய அவரும் அவனுக்காக காத்திருந்தது போல்,

" இப்பதாம்பா போன் வந்தது ...,
உன்னை லீவு கேன்சல் பண்ணிட்டு நாளைக்கே ஜாயின் பண்ண சொல்றாங்க ..."

என மிகுந்த சோகத்துடன் கூற, தனக்கும் செய்தி வந்ததாக கைப்பேசியை காண்பித்தவன்,
ராமிற்கும் இச்செய்தியை தெரிவித்து விட்டதாகவும் இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு வந்து விமானநிலையத்தில் தன்னை வழியனுப்பவுள்ளதாக அவன் தெரிவித்ததையும் கூறிய மைந்தன் , தன்னவளுக்காக புதிதாக வாங்கிவந்த தாலிகொடியை தாயிடம் பெட்டியுடன் நீட்ட, அதனை கைகளில் வாங்கி பிரித்து பார்த்த ராஜேஸ்வரி அசந்துதான் போனார்.

இரு புறமும்(ஒரு புறம் வைரம், மற்றொரு புறம் மாணிக்கம் பதித்த)பயன்படுத்த கூடிய அழகிய மயில் முகப்பினை கொண்ட தாலி
அது.

பொதுவாக மகாராஷ்டிராவில், தாலி சரடு என்பது கருகமணி கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ராஜேஸ்வரி நகை வாங்கும் இந்த பெரிய கடையானது தமிழக பாரம்பரியத்தைக் அடிப்படையாக கொண்டது.


ஆதலால் தமிழர்களின் கலாச்சாரத்தை முன்னிறுத்தியே அனைத்து நகைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.


தாலிக்கொடியை அருகிலிருந்து பார்த்த பர்வதத்திற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததோடு அவரது மனம் பொறாமையால் காந்தியது.

" கிருஷ்ணா, கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகலயே நீ போய்த்தான் ஆகணுமா... இப்ப போன எப்ப பா வருவ..."
என மிகுந்த கவலையில் ராஜேஸ்வரி கேள்வி எழுப்ப,

" உங்களுக்கு தெரியாதா ம்மா ஆர்டர் போட்ட 24 மணி நேரத்துக்குள்ள, டியூட்டில ஜாயின் பண்ணி ஆகணும்னு ...எல்லைல பதற்றம் அதிகமா இருக்கிறதால, லீவுக்கு போன எல்லாரையுமே கூப்பிட்டிருக்காங்க ... நான் இப்ப கிளம்பினாலே, நாளைக்குள்ள சொன்ன இடத்தை ரீச் பண்றது ரொம்ப கஷ்டம் ...சரிமா நான் கிளம்பறேன் ..."
எனக் கூறியவன் ராதாவை பார்த்துக்கொண்டே ,

" திரும்பி வர்றதுக்கு 24 வாரத்துல இருந்து 30 வாரங்களாகும்னு நினைக்கிறேன் " என்றவனின் பார்வையில் தெரிந்தது சோகமா, விரக்தியா , ஏமாற்றமா அல்லது பாசமா எனப் பிரித்துணர முடியாத முகபாவனையை வெளிப்படுத்தியவன் திரும்பி தன் அறையை நோக்கி நடக்கலானான்.

பர்வதத்திற்கு சந்தோஷம் தாள முடியவில்லை. தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும் வேறுவிதமான பிரிவு ஏற்பட்டதை எண்ணி மனம் மகிழ்ந்து போனவள், இச்செய்தியை சித்தார்த்துக்கு பகிர வேண்டும் என்றெண்ணியபடியே, தன் பயணத்திற்கான ஏற்பாடுகளில் மூழ்கிப் போனார்.

கிருஷ்ணா எல்லைக்கு செல்வதொன்றும் ராஜேஸ்வரிக்கு புதிதல்ல.


ஆனால் விடுமுறையை ரத்து செய்துவிட்டு எல்லைக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதால் சிறு பதற்றம் அவரை தொற்றிக் கொண்டது.


அரசாங்கம் மிக நெருக்கடியான சூழ்நிலையை எல்லையில் சந்தித்துக் கொண்டிருந்தால்தான் இம்மாதிரியான திடீர் அழைப்பு வீரர்களுக்கு வரும்.


இம்மாதிரியான அழைப்பு, மறைமுகமாக போர் மூளும் அபாயத்தை குறிப்பதால், தன் மகன் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை மனதார பிரார்த்தித்துக் கொண்டார் அந்த பாசமிகு தாய்.

மகி கிருஷ்ணாவிற்கு தேவையான மதிய உணவு மற்றும் இரவு உணவுகளை தயார் செய்ய, அவசரமாக விமான நிலையத்திற்கு செல்லவிருப்பதால் காரில் எரிபொருள் குறைவாக இருக்கிறதா அல்லது பழுது ஏதேனும் இருக்கிறதா என முருகன் பயணத்திற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தான்.

அவரவர்கள் தத்தம் பணிகள் மற்றும் மன நிலையில் உழன்று கொண்டிருக்க,ராதாவிற்கு தாய் மற்றும் மகனுக்குகிடையேயான உரையாடலிலிருந்து அறிந்துகொண்ட செய்தி அவள் நெஞ்சில் நெருப்பள்ளிக் கொட்டியது போன்ற உணர்வை ஏற்படுத்த , தன்னை சுற்றி பெரிய சூனியத்தை உணர்ந்தவள் அப்படியே நின்று விட்டாள்.



சற்று நேரத்திற்கு பிறகு தன்னுணர்வு பெற்றவள், நிகழப்போவதை அசை போட்டுப் பார்க்கையில்,மனம் வெடித்து அழ வேண்டுமென்ற நிலை எழ, ராஜேஸ்வரியின் குளியலறைக்கு சென்று, குமுறி அழ ஆரம்பித்தாள்.

கடவுளே என் வாழ்க்கையில் நிம்மதி என்பதே கிடையாதா எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை,நான் பத்து நிமிடம் சந்தோஷமாக இருந்தால் 10 மாதங்கள் வருத்தப்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடுகிறாயே என்றெல்லாம் புலம்பியவள், ஒரு கட்டத்தில் தன் நிலை உணர்ந்து


தீதும் நன்றும் பிறர் தர வாரா....


நான் செய்த பூர்வஜென்ம பாவத்திற்கு, நான் பெறுகின்ற தண்டனைகள் இவைகள்.... என கடவுளை குற்றவாளியாக்காமல், இனி ஆக வேண்டியது என்ன என்பதைப் பற்றி யோசிக்கலானாள்.

ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்த சந்தோஷமான மனநிலை எல்லாம், ஏதோ ஒர் நூற்றாண்டிற்கு முன் இருந்தது போன்ற உணர்வை தர, உடனே கிருஷ்ணாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழ ஒருக்களித்த கதவினைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

குளியலறையில் இருந்து வந்த நீர் சத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவள் , அங்கு கட்டிலின் மேல் கிடத்தப்பட்ட பெட்டி, படுக்கை, சீருடைகள், தொப்பி மற்றும் அவனுடைய அடையாள அட்டையை பார்வையிட்டாள்.


சற்று முன் அவன் அணிந்திருந்த நீலநிற மேல்சட்டை அங்கிருக்க, அதனை எடுத்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தாள்.

அப்பொழுது குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க, ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் கடுமையான முகத்துடன் வெளிப்பட்டவன் , அவளைக் கண்டதும் காதலோடு நோக்கி, இரு புருவங்களை உயர்த்தி என்ன என்பது போல் கேட்டபடி அவளருகில் வர,

அவள் கண்களில் மெல்லிய நீர் திரையிட, அவன் கண்களை பார்த்துக்கொண்டே

"எப்ப திரும்ப வருவீங்க " என்று கம்மிய குரலில் அழுகையை அரும்பாடுபட்டு அடக்கியபடி கேட்டவளை, பதிலேதும் கூறாமல் காற்றுப் புக கூட இடமளிக்காமல் இறுகத் தழுவிக் கொண்டான்.

இறுக்கி அணைத்துக் கொள் ...
இதுவே இறுதி முறையாகவும் இருக்கலாம் ....
சென்றால்...
என் உயிர் மட்டுமல்ல
என் உடலும் திரும்பி வராமலே போகலாம் ....

என்று நினைத்தவனின் மனம் கனக்க , பயத்தினால் அவள் உடல் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

இருவரும் அவர்களுக்கென்ற தனி உலகத்தில்,மெய்மறந்து கட்டுண்டிருந்த வேளையில் ,உள் தொலைபேசி சிணுங்கி அவர்களை நிகழ்வு உலகிற்கு அழைத்து வர , அவளை தன் கை வளைவில் வைத்தபடி மறு கையால் தொலைபேசியை எடுத்து பேசியவன்


"சரி ராம், நான் தயார், பத்து நிமிஷத்துல கீழ வந்துடுவேன் ... " எனக்கூறி தொலைபேசியை வைத்தவன், ராதாவின் நெற்றியில் ஆழ்ந்து உச்சி முகர்ந்தான்.


" சரி, நீ கீழே போ நான் பத்து நிமிஷத்துல வந்துடறேன்..."
என கூறி அனுப்பியவன், சரியாக பத்து நிமிடத்திற்கெல்லாம் விமானப்படை சீருடையில், கம்பீரமாக படி இறங்கி வர, அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள் ராதா.

வீட்டில் இருந்த அனைவரும் கூடத்தில் குழுமியிருக்க, மகி பரிமாறிய உணவினை கொறித்துவிட்டு ,ராஜேஸ்வரியின் காலில் விழுந்து வணங்கியவன்,தன்னுடைய பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு, அனைவரிடமும் சென்று வருவதாக கையசைத்துவிட்டு, ராதாவை திரும்பிக்கூடப் பாராமல், ராமுடன் காரில் ஏறிப் புறப்பட்டான்.

கார் வளைவில் திரும்பும் வரை தன்னை திரும்பிப் பார்க்க மாட்டாரா… என்ற ஏக்கத்தில் நின்றிருந்தவள்,கார் திரும்பியதும் அனைத்து சக்தியும் வடிந்தது போன்ற உணர்வில், அவள் கால்கள் நகர மறுத்து அங்கேயே வேரூன்றி போயின.


கண்ணனைத் தேடி ....
 
Back
Top